’ஆட்ட நாயகன், தொடர் நாயகன் சூர்யவன்ஷி..’ ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என வென்றது இந்தியா!
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர் தோல்விகளால் விமர்சனத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை 3-0 என வென்று அழுத்தத்தை தணித்துள்ளது. 3வது போட்டியில் 192 ரன்கள் குவித்த இந்தியா, ஜிம்பாப்வேவை 157 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி மீண்டும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளை கைப்பற்றினார்.
அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கான டி20 தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா இழந்த நிலையில், அடுத்து ஜிம்பாப்வேவுக்குச் சென்றுள்ளது. அந்த அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடியது.
உலகக்கோப்பை வென்ற அணியை முழுமையாக கலைத்து புதிய அணி உருவாக்கியதற்கு ஏற்கனவே கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடுத்தடுத்த 2 தொடர் தோல்விகள் கம்பீர் மீது மட்டுமில்லாமல் ஸ்ரேயாஸ் ஐயர் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது இந்தியா. முதலிரண்டு போட்டிகளில் ஏற்கனவே வெற்றிபெற்ற நிலையில், இன்று நடந்த 3வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்திய சூர்யவன்ஷி அடுத்தடுத்து 2 அரைசதங்கள் அடித்து அசத்தினார்.
193 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஜிம்பாப்வே அணியில் ரியான் பர்ல் 54 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் அவரை தவிர மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை மட்டுமே ஜிம்பாப்வே அணியால் அடிக்க முடிந்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் 3வது டி20 போட்டியை வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. ஆட்டநாயகன் விருதை வென்ற சூர்யவன்ஷி, தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

