கடைசியில் சரிந்த விக்கெட்டுகள்.. 41 ரன்னுக்குள் 7 பேர் காலி.. 3 பேர் சதமடித்தும் குறைவான டோட்டல்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்டு 4 வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி நேற்று இங்கிலாந்து லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்ய இந்திய அணி பேட்டிங் செய்தது.
471 ரன்கள் சேர்த்த இந்தியா!
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் (147) மற்றும் ரிஷப் பண்ட் (134) மூன்று பேரும் சதமடித்து அசத்தினர்.
430/3 என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி 500 ரன்களுக்கு மேல் அடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் பந்துவீச்சில் தரமான கம்பேக் கொடுத்த இங்கிலாந்து அணி அடுத்த 41 ரன்களுக்கு இந்தியாவின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆல்அவுட் செய்தது.
இங்கிலாந்து பந்துவீச்சை பொறுத்தவரை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
3 பேர் சதமடித்து குறைவான டோட்டல்!
இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 3 இந்திய வீரர்கள் சதமடித்த போதும், இந்தியா 500 ரன்களை எட்டாமல் 471 ரன்னுக்கே சுருண்டது.
இது டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 வீரர்கள் சதமடித்த பிறகு பதிவுசெய்யப்பட்ட குறைவான டோட்டலாகும். தென்னாப்பிரிக்காவின் இதற்கு முந்தைய மோசமான சாதனையை (475) முறியடித்தது இந்தியா.