இங்கிலாந்து 387.. இந்தியா 387.. இன்னும் 2 நாள் மீதம்! யாருக்கு வெற்றி?
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்தியா வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தின் உதவியால் 387 ரன்கள் சேர்த்தது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
387 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்!
இங்கிலாந்தை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில், ஜெய்ஸ்வால் 13 ரன், கேப்டன் கில் 16 ரன் மற்றும் சிறப்பாக தொடங்கிய கருண் நாயர் 40 ரன்னும் அடித்து அவுட்டாகினர்.
107 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.
இரண்டு வீரர்களும் அரைசதமடித்த நிலையில், ரிஷப் பண்ட் 74 ரன்களில் இருந்தபோது சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ரன் அவுட்டாகி வெளியேறினார். சதம் விளாசிய கேஎல் ராகுல் 100 ரன்கள் இருந்தபோது விக்கெட்டை இழந்தார்.
அதனைத்தொடர்ந்து வந்த ஜடேஜா 72 ரன்கள் அடிக்க, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 387 ரன்கள் சேர்த்தது. இரண்டு அணிகளும் ஒரே ரன்கள் அடித்திருக்கும் நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை இந்தியா எதிர்கொண்டு விளையாடும். இன்னும் 2 நாட்கள் மீதமிருக்கும் சூழலில் யாருக்கு வெற்றி செல்லும் என்ற சுவாரசியம் எழுந்துள்ளது.