ரோகித், சுப்மன் அதிரடி மழை நின்றபின் ஆடுகளத்தில் விளாசும் நிஜமழை - ஆட்டம் நிறுத்தம்

ஆசியக்கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்று வரும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
India pakistan
India pakistanpt web

2023 ஆசியக்கோப்பை தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவரும் நிலையில், இன்றைய பெரிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக பார்க்கப்படும் நிலையில், இரண்டு அணிகளின் மோதலானது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

IND - PAK
IND - PAKTwitter

கடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தங்களுடைய அபாரமான ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கால் இந்திய டாப் ஆர்டர் வீரர்களை திக்குமுக்காட வைத்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது மோதலில் இந்திய அணி பாகிஸ்தானை எப்படி எதிர்கொண்டு விளையாடபோகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

பாகிஸ்தான் பவுலர்களை மிரட்டி விட்ட ரோகித்-கில் இணை!

முந்தைய லீக் போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் என மூன்று இந்திய டாப் ஆர்டர்களின் ஸ்டம்புகளையும் தகர்த்தெறிந்தனர். 66 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 266 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பின்னர் இரண்டாவது பாதியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

Ind vs Pak
Ind vs Pak

முடிவில் இந்தியாவை மழை தான் காப்பாற்றிவிட்டது, இல்லையென்றால் பாகிஸ்தான் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கும் என்ற பல விமர்சனங்கள் இந்திய அணியின் மீது வைக்கப்பட்டது.

இந்நிலையில், சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று இரண்டாவது மோதலில் ஈடுபட்டன. கொலம்போ பிரேமதாச மைதானத்தில் தொடங்கப்பட்ட போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.

Gill - Rohit
Gill - Rohit

முதலில் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்த ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடியானது தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நல்ல பந்துகளை விட்டுவிடுவது, அடிக்க லாவகாமான பந்துகளை மட்டும் பவுண்டரிகளுக்கு விரட்டுவது என சிறப்பாக தொடக்கத்தை அமைத்தது. இளம் வீரரான சுப்மன் கில் இன்ஸ்விங் மற்றும் அவுட்ஸ்விங் என பந்துவீசி ஆட்டம் காட்டிய நசீம் ஷா பந்துவீச்சில் சிறிது தடுமாறினார்.

சுப்மன் கில் கொடுத்த கடினமான கேட்ச்சை ஷாஹின் அப்ரிடி தவறவிட, அதற்கு பிறகு அதிரடியான ஆட்டத்திற்கு திரும்பினார் சுப்மன். ஸ்விங்குகளை கட் செய்யும் விதமாக ரோகித் மற்றும் கில் இருவரும் களத்தில் இறங்கிவந்து அதிரடியான ஷாட்களை விளையாடினர். கேப்டன் ரோகித் சர்மா அடுத்தடுத்து சிக்சர்களாக பறக்கவிட, தன்னுடைய பிரைம் ஃபார்மை வெளிக்கொண்டுவந்த கில் கிளாசிக்கான ஷாட்களை விளையாடினார். போட்டிப்போட்டுக்கொண்டு இருவரும் பவுண்டரிகளாக விரட்ட, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் அதிகமானது.

Rohit
Rohit

சிக்சர் மழைகளை பொழிய வைத்த ரோகித்சர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என விளாசி 56 ரன்களும், சுப்மன் கில் 10 பவுண்டரிகளை விரட்டி 58 ரன்களும் எடுத்து அசத்தினர். 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை ரோகித்தை வெளியேற்றி பிரித்துவைத்தார் ஷதாப் கான். அதற்கு பிறகு பந்துவீச வந்த ஷாஹின் கில்லை அவுட்டாக்கி பாகிஸ்தானை பெருமூச்சு விட வைத்தார்.

பின்னர் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் விளையாடும் போது 24.1 ஓவரில் மழை குறுக்கிட்டது. இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்துள்ளது. கோலி 8 ரன்னிலும், ராகுல் 17 ரன்னிலும் களத்தில் இருக்கின்றனர். மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் நடைபெறும்.

ரிசர்வ் டே பயன்படுத்தப்படுமா?

இந்தியா-பாகிஸ்தான் மோதும் இந்த போட்டிக்கு ரிசர்வ் டே இருப்பதால், ஒருவேளை இந்த போட்டி இன்று நிறுத்தப்பட்டால் நாளை தற்போது நிறுத்தப்பட்ட இதே ஓவரிலிருந்து நடத்தப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com