தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை என்பதால், அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் களம்கண்டது ரோகித் தலைமையிலான இந்திய அணி. ஆனால் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணி, முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்தது.
செஞ்சுரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, ஸ்லோ ஓவர் ரேட் பிரச்னையால் 2 புள்ளிகள் மைனஸ் பெற்று 10% போட்டிக் கட்டணமாக அபராதமும் கட்டியது.
இந்நிலையில் ஒட்டுமொத்தமாக 4 புள்ளிகளை இழந்த இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் 38.89 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் 6வது இடத்திலிருந்த பாகிஸ்தான் அணி 5வது இடத்திற்கு முன்னேறியது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு 6வது இடத்திற்கு சென்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றியை பெற்று அசத்தியது.
இந்நிலையில் 54.16 புள்ளிகளுடன் 6வது இடத்திலிருந்து முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. தொடரை சமன் செய்தது, 2 போட்டிகளில் வெற்றிபெற்றது என இந்திய அணி சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அடுத்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி.