RCBVsCSK | ஜிதேஷ் சர்மாவின் 'மெனு'.. இட்லி - சாம்பார் பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிசிசிஐ?
ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் ஆட்டத்தைவிட இப்போது 'சட்னி, சாம்பார்' விவகாரத்தால் அனல் பறக்கிறது கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி - சிஎஸ்கே மோதலின்போது, அங்கிருந்த டிஜே (DJ) நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறியபோது, அவர்களைப் பகடிசெய்யும் வகையில் கானா அப்பு எழுதிய "தோசை, இட்லி, சாம்பார், சட்னி" என்ற வைரல் பாடலை அந்த டிஜே ஒலிக்கவிட்டார்.
அதுமட்டுமின்றி, மைக் மூலமாக வீரர்களை அவர் கிண்டல் செய்ததாகவும் சிஎஸ்கே தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மோதலுக்குப் பின்னால் ஒரு பழைய கதையும் இருக்கிறது. கடந்த சீசனில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மா இதே பாடலைப் பாடி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்குப் பதிலடியாகச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிதேஷ் அவுட்டானபோது இதே பாடல் போடப்பட்டது. ஆனால், அப்போதே சிஎஸ்கே நிர்வாகம் தலையிட்டு, எதிரணி வீரர்களைக் கண்ணியக் குறைவாக நடத்தக்கூடாது என அந்தப் பாடலை உடனடியாக நிறுத்தச் செய்தது. ஆனால், தற்போது பெங்களூரு நிர்வாகம் இதனை ஒரு பழிவாங்கும் படலமாக மாற்றியுள்ளது. ரசிகர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமே டிஜே-வின் வேலை என்றும், தனிப்பட்ட முறையில் வம்புக்கு இழுப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் சிஎஸ்கே நிர்வாகம் பிசிசிஐ-யிடம் புகார் அளித்துள்ளது.

