"கோலியை அழைத்து கம்பீர் மன்னிப்பு கேட்க வேண்டும்!"- சர்ச்சை, மோதல் குறித்து பாகிஸ்தான் வீரர் கருத்து

ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு குறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் வீரர் அஹ்மெத் ஷெஹ்சாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மெண்டர் மீது தவறு இருப்பதாக தெரிவித்தார்.
kohli-gambhir
kohli-gambhirTwitter

2023 ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது கோலி மற்றும் லக்னோவின் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முந்தைய போட்டியில் கம்பீர் செய்த சைகைக்காக இந்த போட்டியில் பெங்களூர் அணி வீரர்கள் ஆக்ரோசமாக செயல்பட்டனர். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் இடம் பீல்டராக இருந்த விராட் கோலி பந்தை பிடித்து முறைத்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வு போட்டி முடிந்த பிறகு அமைதியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது களத்தை தாண்டியும் தொடர்ந்தது. போட்டி முடிந்து வீரர்கள் கைக்குலுக்கும் போது நவீன் மற்றும் கோலி இருவரும் வார்த்தை பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதத்தின் இடையே லக்னோ அணியின் மெண்டர் கவுதம் கம்பீர் குறிக்கிட, கோலிக்கும் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமான நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட கோலி, கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் மூவருக்கும் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் முடியும் வரை இது பேசுபொருளாகவே இருந்தது.

விராட் கோலியிடம் கவுதம் கம்பீர் மன்னிப்பு கேட்க வேண்டும்!

பாகிஸ்தானின் ஓபனிங் பேட்டரான அஹ்மெத் ஷெஹ்சாத் அறிமுகமான புதிதில் விராட் கோலியோடு ஒப்பிட்டு பேசப்பட்டார். நாதிர் அலி போட்காஸ்ட் என்ற நிகழ்வில் பங்குபெற்ற அஹ்மெத் ஷெஹ்சாத் விராட் கோலியுடனான உறவை பற்றி, “நாங்கள் இருவரும் பரஸ்பர மரியாதையோடு பழகிவருகிறோம். கிரிக்கெட்டில் எனக்கு எந்த சந்தேகம் என்றாலும் நான் அவரிடம் தான் கேட்பேன். அவர் கனிவாக எனக்கு அனைத்தையும் கூறுவார். ஒரு தலை சிறந்த வீரராக நான் விராட் கோலியை மதிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை மிகவிரைவாகவே புதிய உச்சத்திற்கு அழைத்து சென்றார். இவ்வளவு விரைவாக ஏற்பட்ட ஒரு மாற்றத்தை நான் இதற்கு முன்னர் பார்த்ததில்லை. அவருடைய சிறந்த பேட்டிங் இன்னும் வெளிவரவில்லை என நினைக்கிறேன்” என்று பாராட்டி பேசியிருந்தார்.

இந்நிலையில் அஹ்மெத்திடம் விராட் கோலி மற்றும் கம்பீருக்கு இடையே நடந்த மோதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பாருங்கள் இதற்கு பதிலளிப்பது என் வேலை இல்லை. ஆனால் நீங்கள் என்னிடம் கேட்பதால் தான் என் கருத்தைச் சொல்கிறேன். ஒருவேளை என்னுடைய இந்த கருத்து தவறாக கூட இருக்கலாம். அந்த விவகாரத்தை வெளியில் இருந்து பார்க்கும் போது தவறு கம்பீரின் மீது தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை கம்பீர் தனது உன்னதத்தை காட்ட விரும்பினால், விராட் கோலியை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும்” கூறியுள்ளார்.

கம்பீர் மன்னிப்பு கேட்டால் அவரை பெரிய மனிதராக ஒப்புக்கொள்கிறோம்!

ஒரு அணி நிர்வாகத்தின் உறுப்பினர் விளையாடும் வீரரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதை நான் இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன் என்று கூறிய அஹ்மெத், கம்பீர் விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டால் பெரிய மனிதர் என்று ஒப்புக்கொள்வதாக கூறினார்.

Ahmed Shehzad -kohli
Ahmed Shehzad -kohliTwitter

மேலும் பேசுகையில் “வெளியில் இருந்து பார்த்தால், கம்பீரின் செயல் மோசமாகத் தெரிந்தது. எனது வாழ்நாளில் எந்த ஒரு அணியின் நிர்வாகத்தின் உறுப்பினரும் வீரர்களுக்கு இடையேயான சண்டையில் குதித்ததை நான் பார்த்ததில்லை. ஒருவேளை கம்பீர் விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்டால், அவர் பெரிய மனிதராக நடந்துகொள்கிறார் என்று நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். விராட் கோலியை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்றும், எப்படி அவருக்கு முதல் ஆட்ட நாயகன் விருதை வழங்கினார் என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

2009ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் நடந்த இங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் அடித்திருந்த கவுதம் கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால் அந்த விருதை போட்டியில் மற்றொரு சதமடித்திருந்த விராட் கோலிக்கு வழங்குமாறு கம்பீர் கேட்டுக்கொண்டார். அதன் பிறகு தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை (107 ரன்கள்) அடித்திருந்த விராட் கோலி முதல் ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்டார். அதற்கு பிறகு பேசிய கம்பீர் ஒரு வீரருக்கு முதல் ஆட்ட நாயகன் விருது கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுவும் அது தன்னுடைய முதல் சர்வதேச சதமாகவும், அதில் நாம் வெற்றிபெற்ற அணியாகவும் இருக்கும் போது அது சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com