“தோற்றால் வீரர்கள் மாறுகிறார்கள்; ஆனால் கேப்டன்கள் மாறுவதில்லை”-தோனி, ரோகித்தை தாக்கி பேசிய கவாஸ்கர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகளை ஏன் இந்திய கிரிக்கெட் வாரியம் கேள்வி கேட்கவில்லை என சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Dhoni - Rohit
Dhoni - RohitTwitter

ஜூன் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், ஐசிசி பட்டத்திற்கான இந்திய அணியின் காத்திருப்பானது 10 வருடங்களை தாண்டி மேலும் நீட்டிக்கப்பட்டது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களாக, “டாஸ் வென்று பீல்டிங் தேர்வு, நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளர் அஸ்வினை அமரவைத்தது, டிரவிஸ் ஹெட்டுக்கு எதிராக திட்டம் இல்லாமல் போனது, இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது, ரஹானே, சிராஜை தவிர மற்ற வீரர்கள் ஜொலிக்காதது” என பல காரணங்கள் அடுக்கப்பட்டன.

Ind vs Aus / WTC Final
Ind vs Aus / WTC Finaltwitter

ஆனால் இதையெல்லாம் சரிசெய்வதற்கான இடத்தில் நிச்சயம் அணியின் கேப்டன் இருக்கிறார், அவருக்கு போட்டியின் போக்கு எப்படி செல்கிறது என்பதும் தெரியும், ஒரு முடிவு தவறாக மாறினாலும் அடுத்தடுத்த திட்டங்களுக்கு தயாராக இருந்திருக்க வேண்டும். ஆனால் இவை அனைத்தும் குறித்து கேப்டனிடம் எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை என்றும், அனைத்து வீரர்களும் சோபிக்காத போது சில வீரர்கள் மட்டும் ஏன் அமரவைக்கப்பட்டார்கள் என்றும், ஏன் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் தேர்வுக்குழு மற்றும் கிரிக்கெட் வாரியம் கேள்வி கேட்கவில்லை என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

80 ரன்கள் இருந்த போது செய்த அட்டக்கை ஏன் முதலில் செய்யவில்லை!

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐடியா எக்ஸ்சேஞ் நிகழ்ச்சியில் பேசியிருக்கும் கவாஸ்கர், அணிக்குள் என்ன நடந்தாலும் கேப்டன்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்து கொள்கிறார்கள், ஆனால் மற்ற வீரர்கள் மட்டும் தண்டிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “தேர்வுக்குழுவும் கிரிக்கெட் வாரியமும் கேள்விகளைக் கேட்க வேண்டும். 'நீங்கள் ஏன் முதலில் (WTC இறுதிப் போட்டியில்) பீல்டிங் செய்தீர்கள்?. சரி அப்போது மேகமூட்டமாக இருந்தது என்று டாஸில் விளக்கிவிட்டீர்கள். ஆனால் இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியாதா? டிராவிஸ் ஹெட்டிற்கு ஷார்ட் பந்து பலவீனம் என்று தெரிந்தும் ஏன் அவருக்கு அதை வீசவில்லை?.

Rohit Sharma - Sunil Gavaskar
Rohit Sharma - Sunil GavaskarTwitter

அவர் 80 ரன்கள் எடுத்திருந்த போது மட்டும் ஏன் பவுன்சர் வீசினீர்கள். அப்போது மட்டும் எப்படி உங்களுக்கு அவருடைய பலவீனம் பவுன்சர் என்று தெரியும். ஹெட் பேட்டிங்கிற்குள் வந்த தருணத்தில், வர்ணனைப் பெட்டியில் இருந்த ரிக்கி பாண்டிங், ‘அவருக்கு பவுன்ஸர் வீசவேண்டும், அவருக்கு பவுன்ஸர் வீச வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். எல்லோருக்குமே தெரியும் அவருடைய பலவீனம் என்னவென்று, ஆனால் நீங்கள் அதை முயற்சி செய்யவில்லை. தேர்வுக் குழுவானது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரையும் அழைத்து என்ன நடந்தது? என்று கேள்வி கேட்க வேண்டும்” என்று கவாஸ்கர் குற்றஞ்சாட்டினார்.

2011-ல் இருந்தே இது நடக்கிறது..தோனியை தாக்கி பேசிய கவாஸ்கர்!

அணிக்குள் என்ன நடந்தாலும் கேப்டன்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்து கொள்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய கவாஸ்கர், 2011ல் தோனி தலைமையில் இந்திய அணியின் மோசமான தோல்விகளை நினைவுகூர்ந்தார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “நீங்கள் வென்றாலும் தோல்வியடைந்தாலும் அணியின் கேப்டனுக்கு நிச்சயமாகத் தெரியும், போட்டியின் முடிவில் எந்த பக்கம் இருக்கப்போகிறீர்கள் என்று. இது சமீபத்தில் நடந்த விசயம் மட்டும் அல்ல, நினைவில் கொள்ளுங்கள் இது 2011-ல் இருந்தே நடந்து வருகிறது. அப்போது இந்திய அணி இரண்டு வெளிநாட்டு தொடர்களில் 4-0, 4-0 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டு படுதோல்வியை சந்தித்தது. ஆனால் கேப்டன் மாறவில்லை" என்று தோனியை தாக்கி பேசியுள்ளார்.

MS Dhoni
MS Dhoni

2011-12 காலகட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த தோனி தலைமையிலான இந்திய அணி 4-0, 4-0 என ஒயிட்வாஷ் செய்யப்பட்டது. தற்போதைய இந்திய அணி இரண்டு முறை தொடர்ச்சியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாராட்டிற்குரிய விசயம் என்றாலும், கோப்பையை வெல்ல முடியாமல் போவது கவனிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இந்திய அணி நாக் அவுட் போட்டிகளில் அடைந்த தோல்விகளை எடுத்துக்கொண்டால், பல கோப்பைகளை தன் வசம் செய்திருக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com