அன்பு - டென்னாக மாறிய சென்னை! மைதானம் முழுவதும் பச்சை ஜெர்ஸிகள்! நெகிழ்ந்துபோன பாக். ரசிகர்!

"இவர் இஸ்லாமியர், இவர் இந்து யாருக்கு யார் எதிரி, யார் எந்த மதம் என்று பார்த்து நாங்கள் வருவதில்லை. நாங்கள் சென்னையின் மதிப்புமிகு ரசிகர்கள்"
சேப்பாக்கம்
சேப்பாக்கம்pt web

எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்துக்கு அன்பு டென் என்று பெயர் வந்ததற்கு காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ்அணி.. இப்போது பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் போட்டியால் நிஜமாகவே அன்பு டென்னாகவே காட்சியளித்தது சேப்பாக்கம்.

கிரிக்கெட்டை கொண்டாடும் சேப்பாக்கம் மைதானத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போட்டிக்கு ரசிகர்கள் வரவேற்பு அதிகம் இருந்தது. இந்திய அணி களமிறங்காவிட்டாலும், தங்கள் விருப்பத்திற்குரிய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை வலம் வந்தனர். பிற மைதானங்களைப்போல இல்லாமல், கிரிக்கெட்டை விளையாட்டாகவே பார்க்கும் ரசிகர்களைக்கொண்டது சேப்பாக்கம் என்கிறார்கள் ரசிகர்கள்.

பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா என அனைத்து நாடுகளின் ஜெர்சிகளை அணிந்த ரசிகர்களை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே காண முடிந்தது. 11 ஆண்டுகளுக்குப்பின் சென்னை மண்ணில் விளையாட வந்த பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காஷ்மீர், மேற்குவங்கம் என பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி அமெரிக்காவில் இருந்தும் ரசிகர்கள் சேப்பாக்கத்திற்கு வந்திருந்தனர்.

இந்த உலக கோப்பையில் குஜராத் மைதானத்தில் எழுப்பப்பட்ட ஜெய் ஸ்ரீராம் கோஷம், புனே மைதானத்தில் இந்திய ரசிகர்கள் வங்கதேச ரசிகர்களிடம் நடந்துக்கொண்ட சம்பவங்கள் நடந்த நிலையில், விளையாட்டை ரசிக்கும் சேப்பாக்கம், நிஜமான அன்பு -deN ஆக காட்சியளித்தது.

இது குறித்து மைதானத்திற்கு வந்திருந்த பல்வேறு ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இது குறித்து கிரிக்கெட் ரசிகர் பாலாஜி கூறுகையில், “11 வருடம் கழித்து பாகிஸ்தான் வீரர்கள் வந்துள்ளார்கள். அதனால் போட்டியை பார்க்க வந்துள்ளேன். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும். அதைவைத்து அரசியல் செய்கின்றனர்” என்றார்.

அமீர் கூறுகையில், “இந்தியா, பாகிஸ்தானை ஒன்றிணைக்கும் அம்சமாக கிரிக்கெட் உள்ளது. இருநாடுகளுக்கும் வருங்காலத்திலும் நன்மைகள் நடக்க வாழ்த்துகிறேன்” என்றார்.

தமிழ்ச்செல்வன் கூறுகையில், “போட்டியின் போது நன்றாக விளையாடுபவர்களை சென்னை மக்கள் ஊக்குவிப்போம். இவர் இஸ்லாமியர், இவர் இந்து யாருக்கு யார் எதிரி, யார் எந்த மதம் என்று பார்த்து நாங்கள் வருவதில்லை. நாங்கள் சென்னையின் மதிப்புமிகு ரசிகர்கள்” என்றார்.

அமெரிக்காவில் இருந்து வந்த ரசிகர் கூறுகையில், “கிரிக்கெட் என்பது உற்சாகத்தை தருவது.. இங்கு நிறைய பாகிஸ்தான் ஜெர்சியை காணமுடிகிறது. இதுதான் விளையாட்டு உணர்வு. சில மைதானங்கள் இதுபோன்று ஸ்போர்ட்டிவாக இருப்பதில்லை. அகமதாபாத் மைதானத்தில் 30 ஆயிரம் பேரில் ஓரிரு பச்சை ஜெர்சிகளே இருந்தன. இங்கு பார்க்கவே நன்றாக இருக்கிறது. தென்னிந்திய மக்களுக்கு எனது அன்புகள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com