தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனில் ஐசிசி ஆண்டு மாநாடு நடந்தது. அதில் 2030 ஆம் ஆண்டுக்குள் இதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆண்கள் கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் பரிசுத்தொகை அதே அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் வெல்லும் அணிகளுக்கும் கிடைக்கும்.
இது குறித்து ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே கூறுகையில், “எங்கள் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் ஐசிசி உலகளாவிய நிகழ்வுகளில் போட்டியிடும் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு இப்போது சமமாக வெகுமதி அளிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் போட்டிகளில் பரிசுத் தொகையை அதிகரித்துள்ளோம். ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும் அணி ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வதற்கு சமமான பரிசுத் தொகையை பெறும். இது டி20 உலகக் கோப்பைகள் மற்றும் யு 19 உலகக் கோப்பைகளுக்கும் பொருந்தும். கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு. ஐசிசி வாரியத்தின் இந்த முடிவு அதை வலுப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் வீரர்களுக்கு நிகரான ஊதியம் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இது கிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.