மகளிர் டி20 WC ஃபைனல்| அரைசதம் அடித்த இங்கிலாந்து கேப்டன்.. ஆஸ்திரேலியாவிற்கு 151 ரன்கள் இலக்கு!
2026 மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்துக்கு, கேப்டன் நாட் சிவர்-ப்ரண்ட் அரைசதத்தால் தாங்கு தந்தார். ப்ரேயா கெம்பின் அதிரடி பவுண்டரிகளுடன், 20 ஓவரில் 150 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு 151 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.
2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், முதல் அரையிறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது ஆஸ்திரேலியா.
அதேபோல 2வது அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இங்கிலாந்து அணி 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இந்தசூழலில் இரண்டு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது.
சொந்தமண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து இருந்த நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு எதிராக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா 7 ரன்னுக்கு முதல் விக்கெட், 32 ரன்னுக்கு 2வது விக்கெட் என வீழ்த்தி அசத்தினர். ஒருபக்கம் விக்கெட்டுகளாக சரிய மறுமுனையில் நிலைத்துநின்று ஆடிய கேப்டன் நாட் சிவர்-ப்ரண்ட் அரைசதமடித்து அசத்தினார். மறுமுனையில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ப்ரேயா கெம்ப் 4 பவுண்டரிகள், 1 சிக்சர் என அடித்து அசத்த 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி.
6 முறை கோப்பை வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி 7வது கோப்பை வெல்ல 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

