’புற்றுநோயிலிருந்து மீண்டுவர அவர் தான் காரணம்..’ யுவராஜின் தன்னம்பிக்கையை உயர்த்திய அந்நபர்!
புற்றுநோயால் அவதிப்பட்ட யுவராஜ் சிங், 2011 உலகக்கோப்பையில் ரத்த வாந்தியுடன் விளையாடி இந்தியாவுக்கு கோப்பை வென்றுத் தந்த பின்னணி, சிகிச்சைக்காலத்தில் அனில் கும்ப்ளே, சச்சின் உள்ளிட்டோர் நேரில் வந்து ஊக்கமளித்த விதம், குறிப்பாக டாக்டர் ஐன்ஹார்ன் கூறிய நம்பிக்கையான வார்த்தைகள் அவரை மீண்டெழச் செய்தது போன்ற அனுபவங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
புற்றுநோய், இந்த பெயரைக் கேட்டாலே அனைவரின் உள்ளமும் நடுங்கும். உயிர்குடிக்கும் இந்த கொடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரால் மட்டும் தான், அதன் உண்மையான வலியை புரிந்து கொள்ள முடியும். கொடிய அரக்கனான புற்றுநோய்க்கு முன்னால் பலபேர் தங்களது உயிரையும், வாழ்க்கையையும் விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். ஆனால் புற்றுநோயையே எதிர்த்து போராடி, அதனை வென்று வாழ்பவர்கள் என்றால் சிலர்தான் இருக்கிறார்கள். அப்படி இந்த கொடிய நோயை முறியடித்தவர்களின் பெயர்களில், இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
2011 உலகக்கோப்பை போட்டிகளில் இருமிக்கொண்டு வலியோடு விளையாடிய யுவராஜ் சிங், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரத்த வாந்தி எடுத்தார். ரத்த வாந்தி எடுத்தும் தொடர்ந்து விளையாடிய அவர், அந்த போட்டியில் சதத்தை பதிவு செய்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தருவார். அப்படி உயிரைக்கொடுத்து ஒரு வீரர் நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்ததால் தான், இந்திய அணியால் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கையில் ஏந்த முடிந்தது.
இந்தசூழலில் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு என்ன நடந்தது, எப்படி அதிலிருந்து மீண்டுவந்தேன் என்பது குறித்து யுவராஜ் சிங் மனம்திறந்து பேசியுள்ளார்.
புற்றுநோயிலிருந்து மீண்டுவர அவர்தான் காரணம்..?
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வானுடன் ' தி ஓவர்லேப் கிரிக்கெட்' நிகழ்ச்சியில் உரையாடியபோது பேசிய யுவராஜ் சிங், ”புற்றுநோய் சிகிச்சையின்போது பலர் வந்து பார்த்தார்கள், அனில் கும்ப்ளே அமெரிக்கா வந்து நேராக பார்த்தார். சச்சின் இங்கிலாந்தில் இருந்தபோது வந்து பார்த்தார். இன்னும் பல நண்பர்கள் நேரில் வந்து பார்த்தனர்.
அனில் கும்ப்ளே, நான் கிரிக்கெட் வீடியோக்களாக பார்த்துக்கொண்டிருந்தபோது, லேப்டாப்பை என்னிடமிருந்து வாங்கி அனைத்துவிட்டு ‘உன்னுடைய உடலை நீ முதலில் கவனி’ என்று கூறிவிட்டு சென்றார். பலரிடமிருந்து எனக்கு மோடிவோசன் கிடைத்தது.
முக்கியமாக என்னுடைய டாக்டர் ஐன்ஹார்ன் நம்பிக்கையான வார்த்தைகளையே பேசுவார். அவர் தான் நீங்கள் இதிலிருந்தெல்லாம் விடுபட்டு விரைவில் போய் கிரிக்கெட் விளையாடுவீர்கள் என்று கூறினார். மேலும் இதற்குபிறகு உங்களுக்கு புற்றுநோய் திரும்ப வரவே வராது என்றும் தெரிவித்தார். அதுபோன்ற வார்த்தைகள் தான் உங்களை மீண்டுவர உத்வேகப்படுத்துகிறது” என்று தன்னுடைய அனுபவம் குறித்து யுவராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

