”அவசரமாக நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள்..” தோனியின் மேரேஜ் அட்வைஸால் சிரிப்பலை!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே வீரருமான மகேந்திர சிங் தோனி சமீபத்தில் உத்கர்ஷ் சங்வி மற்றும் தவானி கனுங்கோ திருமணத்தில் கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதுமண ஜோடிக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட தோனி, தன்னுடைய மேரேஜ் அட்வைஸ் ஒன்றையும் கூறினார்.
எப்போதும் போலான தோனியின் நகைச்சுவை பேச்சால் இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோ 4.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், பதிவேற்றப்பட்டதிலிருந்து 328,000 லைக்குகளையும் பெற்றுள்ளது.
எல்லோரும் நெருப்புடன் விளையாட நினைக்கிறார்கள்..
2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை பெற்றாலும், திருமண நிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும், நேர்காணலிலும் பங்கேற்றுவரும் தோனி எப்போதும் தலைப்பு செய்தியாக இருந்துகொண்டே இருக்கிறார். ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆனாலும் ரசிர்களுக்கு தோனியின் மீது இருக்கும் ஆர்வமும் இன்னும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் சமீபத்தில் உத்கர்ஷ் சங்வி மற்றும் தவானி கனுங்கோ திருமணத்தில் கலந்து கொண்ட தோனி, தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் மணமக்களுக்கு மேரேஜ் அட்வைஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இணையத்தில் வெளியாகியிருக்கும் வீடியோவில் பேசியிருக்கும் தோனி, “திருமணம் என்பது மிகவும் நல்ல விஷயம். நீங்கள்தான் அதை அவசரமாகச் செய்துவிட்டீர்கள். சிலர் நெருப்புடன் விளையாட விரும்புகிறார்கள். அவர்களில் நீங்களும் (மணமகன்) ஒருவர்.
இப்போது உத்கர்ஷும் திருமண மாயையில் இருக்கிறார். என் பதில் எப்போதும் போல ஒன்று தான், இங்குள்ள ஒவ்வொரு கணவரும் ஒரே மாதிரிதான். நீங்கள் உலகக் கோப்பையை வென்றீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. உங்கள் கணவர் கோபமாக இருந்தால், அந்த நேரத்தில் எதுவும் சொல்லாதீர்கள். நாங்களே 5 நிமிடங்களில் அமைதியாகிவிடுவோம். எங்கள் பவர் அவ்வளவுதான் என்பது எங்களுக்குத் தெரியும்” என கலகலப்பாக பேசினார்.
மேலும், “உண்மையில், இந்த நகைச்சுவைக்கு ஆண்கள் அதிகமாக சிரிக்கிறார்கள். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. மணமக்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்” என்று கூறி சிரித்தபடி தன் பேச்சை முடித்துக்கொண்டார். அவர் பேசி முடித்தபிறகு தோனி தோனி என்ற கோஷம் அங்கும் ஒலித்தது.