தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடவிருக்கிறது. நீண்ட நாட்களாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் எடுக்கப்படாமல் இருப்பது விமர்சனம் செய்யப்பட்டுவந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது இணைக்கப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 10ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கவிருக்கிறது. அதற்கு பிறகு டிசம்பர் 17-ல் தொடங்கும் ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் நீல நிற ஆடையில் விளையாடவிருக்கிறார்.
இந்நிலையில் இந்திய அணி குறித்தும், சஞ்சு சாம்சன் குறித்தும் பேசியிருக்கும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ், மற்ற இந்திய வீரர்களை விட தென்னாப்பிரிக்கா ஆடுகளத்தில் சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய தொடர் குறித்து பேசியிருக்கும் டி வில்லியர்ஸ், “சஞ்சு சாம்சனை இந்திய அணியில் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நிச்சயம் தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளை ரசிப்பார். ஏனென்றால் அவர் பேட்டிங் செய்யும்போது நேராக நிமிர்ந்து நின்று பேட்டிங் செய்யக்கூடியவர். அதிக பவுன்சர் மற்றும் ஸ்விங்க் இருக்கும் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் மற்ற இந்திய வீரர்கள் தடுமாற வாய்ப்பிருக்கிறது. ஆனால் சஞ்சு சாம்சன் போன்ற ஒருவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் அவர் உங்களுக்கு விக்கெட் கீப்பராகவும் கூடுதல் பலம் சேர்க்கிறார்” என்று டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான ODI இந்திய அணி:
கே.எல்.ராகுல் (கேப்டன்), ருத்ராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஷ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்