CSK அணியில் இருந்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகல்: 18 ஆண்டு கால பந்தம் நிறைவு!
ஐபிஎல் வரலாற்றிலேயே மிக வெற்றிகரமான மற்றும் நீண்ட காலக் கூட்டணியாகத் திகழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும், அதன் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் பரஸ்பரம் தங்களது பயணத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த சுமுகமான மற்றும் நேர்மையான ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த பரஸ்பர முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டான 2008-இல் ஒரு வீரராக சென்னை அணியில் இணைந்த பிளெமிங், அடுத்த ஆண்டான 2009 முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். கடந்த 17 ஆண்டுகால அவரது பயிற்சியின் கீழ், சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பைகளையும், 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்று சாதனை படைத்துள்ளது.இவரது வழிகாட்டுதலில் சென்னை அணி 12 முறை பிளே-ஆஃப் சுற்றுகளுக்குத் தகுதி பெற்றதோடு, 10 முறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளிலும் விளையாடியுள்ளது.
"விளையாட்டுத் துறையில் 18 ஆண்டுகள் என்பது ஒரு வாழ்நாள் போன்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான எனது காலம், என் பயிற்சியாளர் வாழ்க்கையின் மிகச்சிறந்த பாக்கியம். மறக்க முடியாத பல வெற்றிகளை நாம் இணைந்து கொண்டாடியுள்ளோம். சிஎஸ்கே எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்" என ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்திருக்கிறார்.
சென்னை ரசிகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பிளெமிங், சிஎஸ்கே உடனான தனது 18 ஆண்டுகால பந்தத்தை தற்பொழுது நிறைவு செய்துள்ளார்.

