'இந்த இலங்கை வீரர் தான் அடுத்த சச்சின்..' பிசிசிஐ துணைத் தலைவர் புகழாரம்!
காலே டெஸ்டில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் வென்றபின், கொழும்பு டெஸ்டிலும் 503/9 ரன்கள் குவித்து இலங்கையை ஃபாலோ-ஆன் கொடுத்தது. இந்தியா எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சோனல் தினுஷா இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்து போட்டியை டிராவாக மாற்றினார். தொடரில் 4 இன்னிங்ஸில் 3 சதம், 1 அரைசதம் அடித்த அவரை, சச்சினை போல விளையாடும் அற்புத வீரர் என பிசிசிஐ துணைத் தலைவர் பாராட்டியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் மனவ் சுதரின் அற்புதமான பந்துவீச்சு மற்றும் தேவ்தத் படிக்கல்லின் அபாரமான சதத்தின் உதவியால் 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
1-0 என இந்தியா முன்னிலை பெற்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 503/9 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 290 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி ஃபால்லோவ் ஆன் பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவந்த இலங்கை அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 5ஆம் நாள் தொடக்கத்திலேயே இலங்கையை வீழ்த்தி எளிதில் வென்றுவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ‘குறுக்க இந்த கௌசிக் வந்தா’ என்பது போல நடப்பு டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் சிறந்த வீரராக இருந்துவரும் சோனல் தினுஷா, முதல் இன்னிங்ஸில் சதமடித்த கையோடு 2வது இன்னிங்ஸிலும் சதம்விளாசி சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்தியாவிற்கு பெரிய அடியை கொடுத்து போட்டியை டிராவிற்கு அழைத்துச்சென்றார்.
இந்நிலையில் நடப்பு சீசனில் 4 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள், 1 அரைசதம் என அடித்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ள இலங்கை வீரர் சோனலை, பிசிசிஐ துணைத்தலைவர் அடுத்த சச்சின் என பாராட்டியுள்ளார்.
தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் புகழ்ந்த அவர், ““இலங்கை வீரர் சோனல் தினுஷா ஒரு அற்புதமான வீரர். அப்படியே சச்சினை போல விளையாடுகிறார். இவரால் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக விளங்க முடியும்” என புகழாரம் சூடிட்டியுள்ளார்.

