Bajrang Punia
Bajrang PuniaX

சஞ்சய் சிங் மல்யுத்த தலைவரானதற்கு எதிர்ப்பு! ”பத்மஸ்ரீ” விருதை திருப்பியளிக்கும் பஜ்ரங் புனியா!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) புதிய தலைவராக பிரிஜ்பூஷன் சிங்கின் ஆதரளவாராக கூறப்படும் சஞ்சய் சிங் தேர்வான நிலையில், தன்னுடைய பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா கூறியுள்ளார்.
Published on

இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்தாக, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், புதிய தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

அந்த தேர்தலில் சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனை அனிதா ஷியோரனுக்கும், உத்திரப்பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவரான சஞ்சய் சிங்கும் இடையே போட்டி நிலவியது. மல்யுத்த வீரர்களின் ஆதரவு அனிதா ஷியோரனுக்கு இருந்த நிலையில், சஞ்சய் சிங் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றிப்பெற்று புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ்பூஷன் சிங்கின் ஆதரளவார் தான் இந்த சஞ்சய் சிங் என்றும், மல்யுத்த கூட்டமைப்பு எங்களுடைய கோரிக்கையை ஏமாற்றிவிட்டதாகவும் வீரர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டப்பட்டது.

மல்யுத்தத்தை விட்டே விலகுகிறேன்! - கண்ணீருடன் கூறிய சாக்‌ஷி மாலிக்

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாலிக், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினரையும் நெருங்கிய உதவியாளர்களையும் தலைமை பொறுப்பிற்கு அனுமதிக்க மாட்டோம் என்று விளையாட்டு அமைச்சகம் மல்யுத்த வீரர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உத்தரப்பிரதேச மல்யுத்த கூட்டமைப்பின் துணைத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சய் சிங், பிரிஜ் பூஷன் சிங்கின் தீவிர விசுவாசி என்று கூறினார்.

Sakshee Malikkh
Sakshee Malikkh

கண்ணீருடன் உடைந்து பேசிய சாக்‌ஷி, “நாங்கள் 40 நாட்கள் போராட்டத்தில் சாலைகளில் தூங்கினோம். நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் எங்களுக்கு ஆதரவாக வந்தனர். பிரிஜ் பூஷன் சிங்கின் தொழில் பங்குதாரரும், நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் WFI-ன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன்” என்று கூறிவிட்டு கண்ணீரோடு வெளியேறினார்.

பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்கிறேன்! - பஜ்ரங் புனியா

மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டே விலகிய நிலையில், தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான பஜ்ரங் புன்யா பத்ம ஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Bajrang Punia
Bajrang Punia

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, WFI தலைவர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய தலைவராக சஞ்சய் சின் தேர்வுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் வாங்கிய பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதை அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com