பாக்ஸிங் டே டெஸ்ட்| 132 ரன்னுக்கு ஆஸ்திரேலியா ஆல்அவுட்.. வரலாற்று வெற்றியை நோக்கி இங்கிலாந்து!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 132 ரன்னுக்கு சுருண்டது. இங்கிலாந்து 175 ரன்கள் இலக்குடன் வெற்றியை நோக்கி பயணிக்கிறது. ஜோஷ் டங் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றியை நோக்கி முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் 3 போட்டியில் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. தொடரை இழந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்ற கரையையாவது இங்கிலாந்து நீக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.
இந்நிலையில் தான் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் நடந்துவருகிறது.
175 ரன்கள் இலக்கு!
பரபரப்பாக தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி வெறும் 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியும் வெறும் 110 ரன்களில் சுருண்டு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் மைக்கேல் நெசெர் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதிகபட்சமாக இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் 41 ரன்கள் சேர்த்தார்.
இந்தசூழலில் 42 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸை இன்று விளையாடிய நிலையில், 132 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டுள்ளது. பிரைடன் கார்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இங்கிலாந்துக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 2010-11க்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

