94 வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஜம்மு-காஷ்மீர் வீரர்.. பும்ராவிற்கு பதில் அகிப் நபி!
ஜம்மு-காஷ்மீர் அணி 66 ஆண்டுகளுக்குப் பிறகு 2026 ரஞ்சிக்கோப்பையை முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றியின் முக்கிய காரணமாக வேகப்பந்துவீச்சாளர் அகிப் நபி 2 சீசன்களில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் பின்னணியில், பும்ரா காயம் காரணமாக விலகியதால், அகிப் நபி இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து, ஜம்மு-காஷ்மீரிலிருந்து முதல் டெஸ்ட் வீரராக வரலாற்றில் பெயர் பதிக்கிறார்.
1959-60ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை தொடரில் முதன்முறையாக பங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் அணி, 66 சீசன்களாக ஒருமுறை கூட இறுதிப்போட்டியை எட்டியதில்லை. ஆனால் 66 ஆண்டுகளுக்கு பிறகு 2026 சீசனில் முதல்முறையாக ரஞ்சிக்கோப்பையின் இறுதிப்போட்டியை எட்டிய ஜம்மு-காஷ்மீர் அணி, பலம் வாய்ந்த கர்நாடகாவை வீழ்த்தி முதல்முறையாக ரஞ்சிக்கோப்பை வென்று வரலாறு படைத்தது.
2026 சீசன் முழுவதும் அபாரமான பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்திய ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்துவீச்சாளர் அகிப் நபி 60 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். முந்தைய 2025 சீசனையும் சேர்த்தால் 2 சீசன்களில் மொத்தமாக 104 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
ரஞ்சிக்கோப்பையை வென்று ஜம்மு-காஷ்மீர் அணி வரலாறு படைத்தபோதே ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா, எங்கள் வீரர்களும் நாட்டிற்காக விளையாட அழைக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவர் அல்லது இரண்டுபேர் நிச்சயமாக இந்திய ஜெர்சியை அணியத் தகுதியானவர்கள்” என்று உருக்கமாக பேசியிருந்தார். அப்போதே அகிப் நபிக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனாலும் தேர்வுக்குழு அவரை காத்திருக்கவே வைத்தது.
இந்தசூழலில் தான் பும்ரா காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நிலையில், அகிப் நபிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரிலிருந்து முதல் டெஸ்ட் வீரர்..
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஜூலை 7 முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட காயம் குணமாகததால் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் அகிப் நபியை இந்திய தேர்வுக்குழு இந்திய அணியில் சேர்த்துள்ளது.
ஜம்மு காஷ்மீரிலிருந்து இதுவரை 2 வீரர்களே இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆல்ரவுண்டரான பர்வேஷ் ரசூல் இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். அதேபோல பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக் மொத்தமாக 18 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதில் 10 ஒருநாள் போட்டிகளும், 8 டி20 போட்டிகளும் அடங்கும்.
இந்நிலையில் தான் 3வது ஜம்மு-காஷ்மீர் வீரராக அகிப் நபி இந்திய அணிக்காக விளையாட உள்ளார். ஆனால் ஜம்மு-காஷ்மீரிலிருந்து இந்திய டெஸ்ட் அணியில் விளையாடப்போகும் முதல் வீரர் என்ற பெருமையை அகிப் நபியே பெற உள்ளார். பும்ராவிற்கு மாற்றுவீரர் என்பதால் நிச்சயம் ஆடும் 11 பேரில் அவருக்கு இடம்கிடைக்கும் என்பதால் இந்திய வரலாற்று சாதனையை ஆகஸ்ட் 7ஆம் தேதி பெற உள்ளார் அகிப் நபி.

