SA-ல் எப்படி ஆட வேண்டும் என சச்சின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!- முன்னாள் SA ஜாம்பவான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
சச்சின் டெண்டுல்கர் - ஆலன் டொனால்ட்
சச்சின் டெண்டுல்கர் - ஆலன் டொனால்ட்PT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று இந்த முறை வரலாறு படைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. காரணம் ரபாடாவை தவிர தென்னாப்பிரிக்கா அணியில் அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இல்லை என்பதும், எல்கரை தவிர அதிக அனுபவம் வாய்ந்த பேட்டர் இல்லை என்பதும், அத்துடன் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றிருப்பதும் இந்திய அணிக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும் எனக் கூறப்பட்டது.

ind vs sa
ind vs sa

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கலக்கிய தென்னாப்பிரிக்க இளம் பந்துவீச்சாளர்கள் ரபாடாவுடன் சேர்ந்து இந்திய அணியை கலக்கிப் போட்டனர். தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டுகள்போல சரிந்து 131 ரன்களுக்கே ஆல்அவுட்டாகி மோசமான ஒரு தோல்விக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றனர். பேட்டிங்கில் ராகுல், கோலி மற்றும் பந்துவீச்சில் பும்ராவை தவிர வேறெந்த இந்திய வீரர்களும் சோபிக்கவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மோசமாக செயல்பட்ட இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

ind vs sa
ind vs sa

இந்தத் தோல்வி மூலம் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதேயில்லை என்ற மோசமான சாதனையை தொடர்கிறது இந்திய அணி. 31 ஆண்டுகளாக இந்திய அணியை ஆதிக்கம் செலுத்திவரும் தென்னாப்பிரிக்க அணி இந்தமுறையும் விட்டுக்கொடுக்காமல் சென்றுள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில் சிறப்பாக விளையாடிய ஒரேயொரு வீரர் சச்சின் டெண்டுல்கர்தான் என்றும், தற்போதைய இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சாளர்களை, தான் நினைத்ததுபோல பந்துவீச வைப்பவர் சச்சின்!

தென்னாப்பிரிக்கா தொடர் குறித்தும், இந்திய அணி குறித்தும் பிடிஐ உடன் பேசியிருக்கும் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்ட், “தென்னாப்பிரிக்காவில் எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஒரே வீரர் டெண்டுல்கர் மட்டும்தான். மிடில்-ஸ்டம்பில் நின்று விளையாடிய அவர் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை அவர் நினைத்ததுபோல பந்துவீச வைப்பதில் வல்லவர். ஆடுகளத்தில் முன்னேறி வந்து விளையாடி, பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் போட்டு நினைத்த இடத்தில் வீசவைப்பார். அதேபோல அடிக்கவேண்டிய பந்தை மட்டும் அடித்து, மற்றபந்துகளை அற்புதமாக விட்டுவிடுவார்” என்று சச்சினை புகழ்ந்து கூறியுள்ளார்.

Allan Donald
Allan Donald

மேலும் கேப்டவுனில் நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசியிருக்கும் அவர், “இந்த ஆடுகளத்தில் உங்கள் ஷாட்களை கவனமாக விளையாடினால், நீங்கள் ரன்களை எளிதாக எடுக்கலாம். பந்து வீச்சாளர்களை உங்களிடம் வர வைப்பதும், பந்துகளை அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் முக்கியமானது. கேப்டவுன் பேட்டிங் செய்வதற்கு சவாலான ஆடுகளமாகும், இருப்பினும் இது ஒரு சுவாரஸ்யமான போட்டியாகவே இருக்கும். பந்துவீச்சை பொறுத்தவரை கேப்டவுன் முதலில் ஒரு சிறந்த டெஸ்ட் ஆடுகளத்தை கொண்டிருக்கும், பின்னர் அது விரைவில் தட்டையாகிவிடும். எனவே நீங்கள் போட்டியில் நிலைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com