
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட சேத்தன் சர்மா, இந்திய அணியின் தொடர் தோல்விகளால் விமர்சனத்துக்குள்ளானர். இதையடுத்து, அணி வீரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்தார். இதனால் இந்திய அணி மூத்த வீரர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தன்னுடைய தேர்வுக் குழுத் தலைவர் பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் வகித்து வந்த பதவி காலியாக இருந்து வந்தது.
இந்த நிலையில், சுலக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவினர் ஒருமனதாக முன்னாள் வீரர் அஜித் அகார்கரைத் தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்து உள்ளனர். ஆல்ரவுண்டரான அகார்கர், இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதத்துடன் 571 ரன்கள் எடுத்துள்ளார். 58 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அகார்கர், 1269 ரன்களையும் 288 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 4 டி20 போட்டிகளில் விளையாடி ரன்களையும் 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல்லைப் பொறுத்தவரை 42 போட்டிகளில் விளையாடி 179 ரன்களையும் 29 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளராக அகார்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற T20 உலகக் கோப்பையில் வெற்றிபெற்ற இந்திய அணியிலும் அகார்கர் இடம்பிடித்திருந்தார். 2000ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 21 பந்துகளில் அதிவேக அரைசதம் கண்டது இவருடைய சாதனையாக உள்ளது.
தேர்வுக்குழு தலைவரை பொறுத்தவரை தற்போது ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற உறுப்பினர்களுக்கு 90 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு கோடி ரூபாய் என்பது குறைவானதாக இருப்பதாக தேர்வுக்குழு தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க பலரும் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. தற்போது செய்து வரும் வருணனையாளர் உள்ளிட்ட பணிகளில் அதிக வருமானம் கிடைப்பதால் இந்த சம்பளம் குறைவானதாக தெரிகிறது. அதனால், பிசிசிஐ விரைவில் தேர்வுக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்தில் மாற்றம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.