2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரானது வருகிற அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், ஏற்கெனவே 8 அணிகள் (இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா) தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள 2 அணிகளைத் தேர்வு செய்ய 10 அணிகளுக்கு இடையே தகுதிச் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த தொடரின் முடிவில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் வெளியேறின.
மேலும் இந்த தொடரின் இறுதியாட்டத்திலும் இலங்கை அணி நெதர்லாந்தை வீழ்த்தி தகுதிச் சுற்று கோப்பையை உச்சி முகர்ந்தது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இலங்கையின் பதும் நிசாங்கா, நெதர்லாந்தின் விக்ரம்ஜித் சிங் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். 3வது இடத்தில் ஸ்காட்லாந்தின் பிரண்டன் மெக்முல்லனும், 4வது இடத்தில் ஜிம்பாவேயின் சீன் வில்லியம்ஸும், 5வது இடத்தில் நெதர்லாந்தின் பாஸ் டீ லீட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 6வது இடத்தில் ஜிம்பாவேயின் சிக்கந்தர் ராசாவும், 7வது இடத்தில் நெதர்லாந்தின் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.
8 முதல் 11 இடங்களுக்கு முறையே இலங்கையின் வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஸ்காட்லாந்தின் கிறிஸ் சோல், ஜிம்பாவேயின் ரிச்சர்ட் ங்கரவா ஆகியோரும் தேர்வாகி உள்ளனர். இந்த அணிக்கு நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ஸ் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இலங்கை, ஜிம்பாப்வே, நெதர்லாந்தில் தலா 3 வீரர்களும், ஸ்காட்லாந்தில் இருந்து 2 வீரர்களும் தேர்வாகி உள்ளனர்.
முழு தகவலுக்கு: ICC