ஒருநாள் உலகக் கோப்பை: சென்னை சேப்பாக்கத்தில் 5 போட்டிகள்.. யாருக்கு சாதகமாக அமையும்!

ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்த ஆண்டு தங்கள் பயணத்தை இந்திய அணி சென்னையில் துவங்க உள்ள நிலையில் சேப்பாக்கம் மைதானம் யாருக்கு கை கொடுக்கும் என்பது குறித்த செய்தி தொகுப்பு.
சென்னை சேப்பாக்கம் மைதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானம்Twitter

இந்தியாவின் இரண்டாவது பழமையான கிரிக்கெட் மைதானம் என்பதை எல்லாம் கடந்து, இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வுகள் இங்குதான் நடைபெற்றுள்ளது. இந்திய அணிக்கான முதல் டெஸ்ட் வெற்றி, இந்தியாவின் முக்கிய தொடராக பார்க்கப்படும் ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் இங்கு நடைபெற்று உள்ளன.

அறிவார்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் என்ற பட்டம் பெற்ற சென்னை மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 5 போட்டிகள் நடைபெறுகின்றன. இதே மைதானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிராக கடும் வெயிலில் இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் சதம் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற காட்சிகள் இன்றும் பசுமரத்து ஆணி போல ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளும், 23 ஒரு நாள் போட்டிகளும், 2 டி20 போட்டியும் நடைபெற்று உள்ளது. சென்னையில் நடைபெற்ற 23 ஒரு நாள் போட்டிகளில், 14 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 8 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை.

ind vs aus
ind vs aus

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை துவக்க காலத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும், கடந்த 1980-களுக்கு பிறகு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு மைதானமாகவே உள்ளது. இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக கபில்தேவ் மட்டுமே உள்ளார்; மற்ற 9 வீரர்கள் ஸ்பின்னர்கள்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை பொறுத்தவரை பழைய சேப்பாக்கம் மைதானம் போல பந்து ஸ்பின் ஆகவில்லை என்றாலும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவே தற்போது மைதானம் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் உள்ளது. இதன் காரணமாகவே கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வாக இந்த மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது போட்டியை நடத்தினால் அது அந்த அணிக்கு முழுமையாக சாதகமாக இருக்கும் என கூறி பாகிஸ்தான் அணி, ஒரு அதிர்ச்சி கடிதத்தை எழுதினர். இருப்பினும் அந்த கோரிக்கையை தற்போது ஐ.சி.சி மறுத்துள்ளது.

ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை புதிய பந்தாக இருக்கும் நேரத்தில் பேட்ஸ்மேனுக்கு சாதகமாகவும், பின்னர் மைதானத்தில் வேகம் குறைய குறைய பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக மைதானம் இருக்கும் என்பதால் போட்டி ஒரு பக்கம் சாயாமல் இரண்டு தரப்பிற்கும் வாய்ப்புகள் இருக்கும் என பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்திய நிலையில், மீண்டும் இந்த இரண்டு அணிகளும் தங்கள் உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவங்க முனைப்போடு விளையாடுவார்கள் என்பதால், ரசிகர்களுக்கு விருந்தாக இந்த போட்டி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அக்டோபர் 8: இந்தியா - ஆஸ்திரேலியா

அக்டோபர் 14: நியூசிலாந்து - வங்கதேசம்

அக்டோபர் 18: நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்

அக்டோபர் 23: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான்

அக்டோபர் 27: ஆப்கானிஸ்தான் - தென் ஆப்ரிக்கா

இந்நிலையில், உலக கோப்பையில் இந்தியா வெற்றிபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் அணி பயிற்சியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சேலத்தில் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி ஆலோசனை அளிக்க வந்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அணி பயிற்சியாளர் வெங்கட்ராமன் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சென்னை மைதானம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஐ.பி.எல். போட்டிகள் அந்த மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இதில், முதல் 10 ஓவரையும், கடைசி 10 ஓவரையும் சிறப்பாக கையாளும் அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கும். இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும், அதற்கான நம்பிக்கை இந்திய வீரர்களிடம் இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com