அபுதாபியில் அதிகரிக்கும் கொரோனா: ஐபிஎல் நடைபெறுவதில் சிக்கலா ?
அபுதாபியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று சேர்ந்துவிட்ட நிலையில், அமீரகத் தலைநகர் அபுதாபியில் கொரோனா மீண்டும் வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த இயலுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
அதனால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை அறிவிப்பதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அபுதாபியில் கொரோனா அதிகம் பரவி வருவதைக் கட்டுப்படுத்த அமீரகத்துக்கு வரும் அனைத்து நுழைவுப் வாயில்களிலும் தொற்று பரிசோதனையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் அபுதாபி மைதானத்தை தவிர்த்துவிட்டு, போட்டிகளின் எண்ணிக்கையையும் குறைக்கலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 13 ஆவது ஐபிஎல் டி20 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.