‘அடுத்தடுத்து 3 விக்கெட்’ - டென்ஷன் ஆன ரசிகர்களை கூல் செய்த பும்ரா

‘அடுத்தடுத்து 3 விக்கெட்’ - டென்ஷன் ஆன ரசிகர்களை கூல் செய்த பும்ரா
‘அடுத்தடுத்து 3 விக்கெட்’ - டென்ஷன் ஆன ரசிகர்களை கூல் செய்த பும்ரா

இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது.

நாட்டிங்ஹாமில் நடைபெறும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களும், இங்கிலாந்து அணி 161 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. 

நான்காவது நாளான இன்று குக் 9 ரன்களுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஜென்னிங்ஸ் மேலும் ரன் எதுவும் சேர்க்காத நிலையிலும், குக் 17 ரன்களிலும் இஷாந்த் ஷர்மாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். ஜோ ரூட் 13 ரன்களிலும், போப் 16 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இங்கிலாந்து அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால், 200 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், பட்லர், ஸ்டோக்ஸ் இருவரும் ஆட்டத்தின் போக்கினையே மாற்றினார். மிகவும் நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். இதனால், 41.3 ஓவரில் 100 ரன்களையும், 55 ஓவரில் 150 ரன்களையும் இங்கிலாந்து எட்டியது. ஒரு கட்டம் வரை நிதானமாக ஒன்று இரண்டு ரன்களை மட்டும் எடுத்து வந்த இந்த ஜோடி, பின்னர் அவ்வவ்போது பவுண்டரிகளை அடித்து விளையாடியது. பட்லர் 93 பந்துகளில் அரைசதம் அடித்தார். 

ஓவர்கள் செல்ல செல்ல இருவரும் அவுட் ஆவது போலவே தெரியவில்லை. இதனால், இந்திய ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டார்கள். இரண்டாவது செஷன் முழுவதும் விக்கெட் விழவேயில்லை. பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடி ஒரு கிளாசிக்காக ஆட்டத்தை ஆடினார்கள். பட்லர் சதம் அடித்த ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பட்லர் - ஸ்டோக்ஸ் ஜோடியின் ஆட்டம் டென்ஷன் எகிற வைத்தது. மேற்கொண்டு பெர்ஸ்டோவ், சதம் அடித்த வோக்ஸ் ஆகியோர் இருப்பதால் அடித்துவிடுவார்களோ என்ற எண்ண தோன்றியது. 

இந்த நிலையில்தான், இந்திய ரசிகர்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில் பும்ரா அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார். முதல்கட்டமாக 106 ரன்கள் எடுத்த நிலையில் பட்லரை ஆட்டமிழக்க செய்தார். பட்லர் ஆட்டமிழந்த அடுத்த பந்திலே பெர்ஸ்டோவை அவுட் ஆக்கினார். இதனையடுத்து, வோக்ஸையும் அவரே சாய்த்தார். 62 ரன் எடுத்த நிலையில், ஸ்டோக்ஸை பாண்ட்யா ஆட்டமிழக்க செய்தார். இதனால், 88 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com