சதீஷ்குமார் என்பவரின் மரணம் தொடர்பாக, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் மீது மீண்டும் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஓமலூர் அருகே உள்ள பெரிய வடகம்பட்டியை சேர்ந்த காணாமல் போன சதீஷ்குமார் என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில்வே பாதை அருகே சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் மீது குற்றம்சாட்டிய சதீஷ் குமாரின் உறவினர்கள், மாரியப்பன் மீது புகார் அளித்திருந்தனர்.
இதுகுறித்து பேட்டியளித்த மாரியப்பன், சதீஷ்குமார் கொலை வழக்கில், தன்னை மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இது போன்று தன்மீது அவதூறு பரப்புவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சதீஸ்குமாரின் சகோதரியான சங்கீதா, தனது சகோதரனின் மரணத்திற்கு மாரியப்பன்தான் காரணம் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் இன்று மீண்டும் புகார் அளித்துள்ளார்.