காமன்வெல்த் மல்யுத்தம்: பதக்கங்களை அள்ளிய இந்திய வீரர்கள்

காமன்வெல்த் மல்யுத்தம்: பதக்கங்களை அள்ளிய இந்திய வீரர்கள்
காமன்வெல்த் மல்யுத்தம்: பதக்கங்களை அள்ளிய இந்திய வீரர்கள்

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என 21 பதக்கங்களை வென்றுள்ளது. 8-வது நாளான நேற்று மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவின் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய வீரர் மோஹித் கிரேவால், 6-க்கு பூஜ்ஜியம் என்ற
புள்ளி கணக்கில் ஆரோன் ஜான்சனை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கத்தையும், திவ்யா கக்ரன் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்குள் நுழைந்த 4 இந்திய வீரர்கள், 3 தங்கம் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தினர். முதலாவதாக நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில், இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் நைஜீரியா வீராங்கனையிடம் 3- க்கு 7 என்ற புள்ளி கணக்கில் வெள்ளி பதக்கத்தை தக்க வைத்தார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் தனது முதல் வெள்ளி பதக்கத்தை, பிறந்தநாள் அன்று அன்ஷூ மாலிக் கைப்பற்றியுள்ளார்.

ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா கனடா வீரருடன் மோதினார். இதில், பஜ்ரங் புனியா 9-க்கு 2 என்ற புள்ளி கணக்கில் தங்கப்பதக்கத்தை தன் வசப்படுத்தினார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 முறை தங்கம் வென்று பஜ்ரங் புனியா அசத்தியுள்ளார்.

இதேபோன்று பெண்களுக்கான 62 கிலோ எடைப் பிரிவில் களம் இறங்கிய சாக்ஷி மாலிக், கனடா வீராங்கனையுடன் மோதினார். இருவரும் 4-க்கு 4 என்ற சமபுள்ளி பெற்றிருந்த நிலையில், எதிராளியை எழ விடாமல் கீழே தள்ளி, சாக்ஷி மாலிக் தங்கப் பதக்கத்தை தூக்கினார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் சாக்ஷி மாலிக் முதன் முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆண்களுக்கான 86 கிலோ எடை பிரிவில் பாகிஸ்தான் வீரருடன் மோதிய தீபக் புனியா, 3-க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் எதிராளியை வீழ்த்தினார். காமன்வெல்த் போட்டியில், தீபக் புனியா தனது முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பெண்களுக்கான 68 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா கக்ரான் டோங்கா நாட்டு வீராங்கனையை எதிர்கொண்டார். இதில் 2-க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் எதிராளியை வீழ்த்திய திவ்யா, வெண்கல பதக்கத்தை வென்றார்.

மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்றுத் தந்துள்ள வீரர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட்: ஓய்வு நாளில் தமிழ்நாட்டின் தொன்மையை கண்டுகளித்த வீரர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com