“இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும்” - தமிழக முதலமைச்சருக்கு நன்றி சொன்ன குகேஷ்!
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ள டி.குகேஷ் செய்தியாளர்களை சென்னையில் சந்தித்தார்.
போட்டியில் இருந்த சவால்கள் குறித்து பேசிய குகேஷ்..
அப்போது பேசிய உலக செஸ் சாம்பியன் குகேஷ், “உலக சாம்பியன் ஆகவேண்டுமென்பது என்னுடைய சிறுவயது கனவு. என் கனவை நிஜமாக்கி வீட்டுக்கு திரும்புவதில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். நான் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம்தான் ஆகிறது. நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் எவ்வளவு பெருமையாக உள்ளது என்பதை பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இனி வீட்டில் இருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பேன்.
சிறுவயதில் இருந்து உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவது என்னுடைய கனவாக இருந்தது. தற்பொழுது அது நிறைவேறி இருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்த போட்டிகளில் நிறைய உயர்வு தாழ்வுகள் இருந்தன, வேறு மாதிரியான எமோஷன் இருந்தது, 14 ஆவது சுற்றில் வெற்றி வரும் பொழுது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.
எதை செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். செஸ் ஒரு சிறந்த விளையாட்டு, அதில் நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதும் என்னுடைய போட்டிகளை நேசித்து மனம் நிறைந்து விளையாடுவேன் நான். இப்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. இலக்கு சரியாக இருந்தால் வெற்றி சரியாக இருக்கும்” என்று பேசினார்.
மேலும், “14 ஆவது கூற்றில் சற்று சாதகம் இருக்கும் என்று நினைத்து, அதற்கு தயாராகவே நான் இருந்தேன். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை முதல் முறையாக ஆடுகிறேன் என்பதால் சற்று பதட்டம் இருக்கும் என்று எனக்கு தெரியும். நிறைய நல்ல டிசிஷனை எடுக்கவில்லை, ஆனால் நல்லது நடக்கும் என்று நினைத்தேன். டைபிரேக்கருக்கு ஆட்டம் போகுமென்ற எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், 14 ஆவது சுற்று இருப்பதால் எனக்கு சாதகமான சூழல் வரும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது” என்று கூறினார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து பேசிய குகேஷ்..
இத்துடன், “தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் எப்பொழுது நான் வெற்றி பெற்றாலும் என்னை வீட்டுக்கு அழைத்து பாராட்டி, ரொக்க பரிசு கொடுக்கிறார்கள். 2023ஆம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் வெற்றி பெற்றதால் கேண்டிடேட் செஸ் போட்டிற்கு தகுதி பெற முடிந்தது.
தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பது மட்டுமில்லாமல் நிறைய உதவி எனக்கு செய்துள்ளார்கள், தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றி” என்று கூறினார்.
குழந்தைகளுக்கான விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யவேண்டும்..
குகேஷ் தந்தை ரஜினிகாந்த் பேசுகையில், “எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முதலில் விருப்பம் இருக்க வேண்டும். இல்லையென்றால் எதையும் செய்ய முடியாது. நாங்கள் முதலில் செஸ் என்று தேர்வு செய்யவில்லை. விளையாட்டை பொழுதுபோக்காகத்தான் முதலில் தேர்வு செய்தோம், எங்களுடைய வசதிக்காகத்தான் நாங்கள் செஸ் விளையாட்டை தேர்வு செய்தோம்.
குகேஷிற்கு விருப்பம் அதிகமாக இருந்ததால் அவர் அதில் கடின உழைப்பு செலுத்தினார். உங்கள் குழந்தைகளுக்கு எதில் அதிக விருப்பம் உள்ளதோ அதை பெற்றோர்கள் தேர்வு செய்து குழந்தைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.