FIDE CHESS WORLD CUP | இந்தியாவின் 20 வீரர்கள் பங்கேற்கும் உலகத் தொடர்..!
இந்தியாவில் இந்த ஆண்டு செஸ் உலகக்கோப்பை நடத்தவிருப்பதாக FIDE அறிவித்திருக்கிறது. அக்டோபர் 30ம் தேதி தொடங்கி நவம்பர் 27 வரை இந்த போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. எந்த இடத்தில் போட்டி என்பது உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், கோவாவில் இந்த முறை போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
இந்தியா செஸ் தொடர்களின் சர்வதேச சந்தையாக மாறிவருகிறது. 2022ம் ஆண்டு FIDE CHESS ஒலிம்பியாடை நம் மாமல்லபுரத்தில் மிகச்சிறப்பாக நடத்திக்காட்டினோம். சென்னை முழுக்கவே அதற்கென சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. FIDE Chess Olympiad 2022, TATA STEEL CHESS INDIA, FIDE World Junior U20 Championships 2024, FIDE Women’s Grand Prix (April 2025) உட்பட சர்வதேச தொடர்களை இந்தியா தொடர்ந்து நடத்திவருகிறது.
இந்த ஆண்டு நடக்கும் செஸ் உலகக்கோப்பையில் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகஸி, சிதம்பரம் அரவிந்த், விஸ்வநாதன் ஆனந்த், நிஹல் சரின், இனியன், ராஜா ரித்விக், SL நாராயணன், பிரனேஷ், ஹர்ஷவர்தன், முரளி கார்த்திகேயன், இடானி, கார்த்திக் வெங்கட் ராமன், கங்குலி சூர்யா, நீலஷ் சாஹா, கோஷ் தீப்தயான். அரோம்யக் கோஷ், குசைன் இமால், லலித் பாபு என பல இந்திய வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இது FIDE ஓப்பன் செஸ் உலகக்கோப்பை. பெண்களுக்கான செஸ் உலகக்கோப்பை தற்போது நடைபெற்றுவருகிறது. FIDEவின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், விஸ்வநாதன் ஆனந்த் தொடரில் பங்கேற்பாரா என்கிற ஆர்வம் பலரிடத்தில் எழுந்திருக்கிறது.
FIDE செஸ் உலகக்கோப்பை
FIDE செஸ் உலகக்கோப்பையில் 206 வீரர்கள் பங்குபெறுவார்கள் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறும். அதாவது ஒவ்வொரு சுற்று இறுதியிலும், தோற்கும் வீரர் வெளியேற வேண்டும். மொத்தம் எட்டு சுற்றுக்கள் போட்டிகள் நடக்கும். அப்படியெனில் ஒரு வீரருக்கு அடுத்த சுற்றுக்குள் நகர ஒரேயொரு வாய்ப்பு தான் வழங்கப்படுமா. அதுதான் இல்லை.
அதாவது ஒரு சுற்று மூன்று நாட்கள் நடக்கும். முதல் நாளில் ஒரு கிளாசிக்கல் போட்டியும், இரண்டாம் நாளில் ஒரு கிளாசிக்கல் போட்டியும் நடக்கும். இரண்டிலும் வெல்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். தோற்றவர்கள் வெளியேறுவர்கள். மூன்றாவது நாள் ஓய்வு நாளாகக் கருதப்படும். அதே சமயம், முதல் நாள் ஒருவரும்,அடுத்த நாள் இன்னொருவரும் வென்றுவிட்டால், மூன்றாவது நாள் டை பிரேக்கர் முறையில் போட்டிகள் நடைபெறும். டை பிரேக்கர் போட்டிகள் ரேட்பிட் , ப்ளிட்ஸ் முறையில் அதிவேக போட்டிகளாக நடைபெறும்.
கிளாசிக்கல் சுற்றில் முதல் 40 மூவ்களுக்கு இரு போட்டியாளருக்கும் தலா 90 நிமிடங்கள் கொடுக்கப்படும். ஒவ்வொரு மூவ் முடிந்த பின்னரும், 30 நொடி கூடுதல் அவகாசம் சேர்த்துக்கொள்ளப்படும். 40 மூவ்களில் போட்டி முடியவில்லை என்றால், மீண்டும் இருவருக்கும் தலா 30 நிமிடங்கள் கொடுக்கப்படும்.
206 வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறை
ஜூன் 1, 2025 கணக்கின்படி உலக சாம்பியனாக இருப்பவர் நேரடியாக தகுதி பெறுவார். (குகேஷ்)
2023ல் நடைபெற்ற உலகக்கோப்பையில் முதல் நான்கு இடங்களை கைப்பற்றிய நபர்கள் நேரடியாக களம் காணலாம். (கார்ல்சன், பிரக்ஞானந்தா, பேபியோனா கருஆனா, நிஜத் அபசோவ்)
ஜூன் 1 , 2025 கணக்கின்படி , பெண்கள் உலக சாம்பியனாக இருப்பவர் நேரடியாக தகுதி பெறலாம். (ஜூ வெஞ்சுன்)
20 வயதுக்குட்பட்டோரில் 2024ம் ஆண்டின் உலக ஜூனியர் சாம்பியன் நேரடியாக தகுதி பெறுவார். (கேஸிபெக் நோபெர்பெக்)
வெவ்வேறு சர்வதேச தொடர்களில் இருந்து தகுதிபெற்ற 80 வீரர்கள்
ஏற்கெனவே தகுதிபெற்ற வீரர்கள் தவிர்த்து, ஜூன் FIDE ரேட்டிங்கில் இருந்து டாப் 13 வீரர்கள் நேரடியாக களம் காணலாம்.
2024 செஸ் ஒலிம்பியாட் ஓப்பன் சுற்றில் விளையாடிய 100 வீரர்கள்.
FIDE தலைவரால் பரிந்துரை செய்யப்படும் நான்கு வீரர்கள்
ஆர்கனைஸார் பரிந்துரை செய்யப்படும் இரண்டு வீரர்கள்.
FIDE செஸ் உலகக்கோப்பையில் முதல் மூன்று இடங்களில் வெல்லும் வீரர்கள் கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாடும் தகுதி பெறுவார்கள். அப்படியெனில் செஸ் உலகக்கோப்பையைவிட கேண்டிடேட்ஸ் பெரிய தொடரா என்றால். கேண்டிடேட்ஸ் தொடரில் வெல்பவரால் மட்டுமே, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால், அது மிக முக்கியமான தொடராக கருதப்படுகிறது. உலகின் அதிசிறந்த எட்டு வீரர்கள் கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாடுவார்கள்.