செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓய்வு நாளில் வெளிநாட்டு செஸ் வீரர், வீராங்கனைகள், மாமல்லபுரத்தின் கலையழகை கண்டு ரசித்தனர்.
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில், முதல் 6 சுற்றுப் போட்டிகள் தொடர்ச்சியாக நடந்தநிலையில், நேற்று ஒருநாள் ஓய்வு விடப்பட்டது. ஓய்வுநாளையொட்டி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கால்பந்து விளையாடி வீரர்கள் மகிழ்ந்தனர். மற்ற வீரர்கள் மாமல்லபுரத்தை சுற்றிப்பார்த்தனர். கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு ஐந்துரதம் என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் சுற்றிப்பார்த்தனர்.
5 தலைமுறைக்கு முன் ஷெஷல்ஸ் நாட்டில் குடியேறிய தமிழக வம்சாவளியைச் சேர்ந்தவர்களான ராகுல்கிருஷ்ணா, ராஜகணேஷ் இருவரும் தமிழர் என்று சொல்வதை பெருமையாக நினைப்பதாக தெரிவித்தனர். மாமல்லபுரத்தை சுற்றி பார்த்தபின் பேசிய வெளிநாட்டு வீரர்கள் மற்றும் சர்வதேச செஸ் கூட்டமைப்பை சார்ந்த நிர்வாகிகள் கடற்கரை கோயிலின் அழகால் கவரப்பட்டதை ஆச்சரியத்துடன் பகிர்ந்துகொண்டனர்.
அதிக நாடுகள், அதிக அணிகள் பங்கேற்கும் வரலாற்றை படைத்து நடைபெற்று வரும் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் தற்போது அந்த வீரர்களுக்கு தமிழகத்தின் தொன்மையையும், பண்டை நாகரீகத்தையும் சொல்லித்தருகிறது.