டி20 உலகக் கோப்பையையும் தவறவிடும் சென்னை அணி வீரர்? - வெளியான தகவல்
சென்னை அணி வீரரான தீபக் சாஹர் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியநிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையையும் தவறவிடும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளரான தீபக் சாஹர், கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி 20 ஓவர் போட்டியின்போது காயமடைந்தார்.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு சென்ற தீபக் சாஹர், அங்கு சிகிச்சை மற்றும் முறையான வலைப் பயிற்சிகளை மேற்கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக முதுகிலும் அவருக்கு புதிதாக காயம் ஏற்பட்டது. இதனால், குறைந்தது 4 மாதங்கள் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் 15-வது சீசன் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக 14 கோடி ரூபாய்க்கு, கடும் போட்டிகளுக்கு இடையே அவர் ஏலம் எடுக்கப்பட்டார். தோனியைவிட அதிக தொகைக்கு ஏலம் எடுத்த சென்னை அணி நிர்வாகம், தீபக் சாஹர் களத்துக்கு திரும்புவார் என ஆர்வமாக காத்திருந்தநிலையில், அந்த அணிக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில், சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என தேசிய கிரிக்கெட் அகாடெமி தெரிவித்தது.
இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய மண்ணில், வருகிற அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ள, 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் தீபக் சாஹர் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது.