பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் - சிஎஸ்கேவில் மூன்று அதிரடி மாற்றங்கள்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
சென்னை அணி முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும், முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணியிடம் தோல்வியைத் தழுவியது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், தோனி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ராயுடு, வாட்சன் ஃபார்ம் சென்னை அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். சென்னை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குஜ்ஜிலிஜின் தனது அறிமுக போட்டியில் களமிறங்குகிறார். ஹர்பஜன் அணிக்கு திரும்பியுள்ளார். இந்தத் தொடரில் டு பிளிசிஸ் தனது முதல் போட்டியில் விளையாடுகிறார். பிராவோ, மோகித் சர்மா, ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பெறவில்லை.
பஞ்சாப் அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கிறிஸ் கெயில் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல், ஆண்டிருவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய முஜூப், ஹர்துஸ் வில்ஜோயின் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த பிராவோ, 2 வாரம் விளையாடமாட்டார் என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர்கள் லுங்கி நிகிடி, டேவிட் வில்லே இல்லாத நிலையில் பிராவோவும் இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.