8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இங்கி.: தொடரை வென்றது இந்தியா
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
பெங்களூருவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரெய்னா மற்றும் தோனி ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. இதையடுத்து 203 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை ஜேசன் ராய் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகியோர் தொடங்கினர். சாம்பில்லிங்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், ஜேசன் ராய் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து கைகோர்த்த ஜோரூட் மற்றும் கேப்டன் மோர்கன் ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஆனால், பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இங்கிலாந்து அணி 16.3 ஓவர்களின் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 42 ரன்களும், மோர்கன் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணி கடைசி 8 விக்கெட்டுகளை அடுத்த 8 ரன்களைச் சேர்ப்பதற்குள் இழந்து, 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குறிப்பாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்த இந்திய வீரர் சஹால், 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது சிறந்த பந்துவீச்சாக அது அமைந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. விராத் கோலி தலைமையில் இந்திய அணி பெறும் முதல் டி20 தொடர் வெற்றி இதுவாகும்.