
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் இன்று மோதுகிறது.
டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக், டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இதில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீசும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடக்கிறது. கடந்த ஆண்டும் இந்த இரு அணிகளே இறுதி சுற்றில் பங்கேற்றன. அதில் தூத்துக்குடி வென்றது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெரும் முனைப்பில் தூத்துக்குடி அணி இருக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அதற்கு சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் சதீஷ் கூறும்போது, ’இந்த தொடரில் சில தோல்விகளை சந்தித்திருக்கிறோம். இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் வெற்றியை நோக்கி பயணிப்போம்’ என்றார்.
தூத்துக்குடி அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறும்போது, ‘இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டோம். இறுதிப் போட்டிக்கான அழுத்தம் இருந்தாலும் அதை கவனத்தில் வைத்துக்கொள்ளாமல் வெற்றியை நோக்கி செல்வோம்’ என்றார்.