’ஸாரி அஸ்வின், ரொம்ப ஏமாந்துட்டேன்’: ’மன்கட்’ பற்றி ஷேன் வார்ன் -ஹர்ஷா மோதல்!

’ஸாரி அஸ்வின், ரொம்ப ஏமாந்துட்டேன்’: ’மன்கட்’ பற்றி ஷேன் வார்ன் -ஹர்ஷா மோதல்!
’ஸாரி அஸ்வின், ரொம்ப ஏமாந்துட்டேன்’: ’மன்கட்’ பற்றி ஷேன் வார்ன் -ஹர்ஷா மோதல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான ஜாஸ் பட்லரை ’மன்கட்’ முறையில் அஸ்வின் ஆட்டமிழக்க செய்த விவகாரத்தில் ஷேன் வார்னும் ஹர்ஷா போக்ளேவும் வார்த்தையால் மோதிக்கொண்டனர். 

ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது, அஸ்வின் செய்த 'மன்கட்' முறை அவுட். சமூக வலைதளங்களில் இது பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. 

விதிப்படி சரியாக இருந்தாலும் இந்த முறையில் அவுட் செய்வது சரியாகாது என்றும் விதியே சரி எனும் போது தவறில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது விவாதங்கள். 

இதற்கிடையே இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் ஷேன் வார்னும் கிரிக்கெட் வர்ணனையாளரும் விமர்சகருமான ஹர்ஷா போக்ளேவும் ட்விட்டரில் சுகமாக மோதிக்கொண்டனர்.

 “ஒரு கேப்டனாகவும் தனி நபராகவும் உங்கள் (அஸ்வின்) மீது ஏமாற்றம் அடைந்தேன். அனைத்து கேப்டன்களும் ஐபிஎல் கிரிக்கெட்டை ஆட்ட உணர்வுடன் ஆட உறுதி எடுத்துள்ளனர். அஸ்வின் பந்தை முழுதும் வீசுவதற்கான எந்த நோக்கத்தையும் காட்டவில்லை. அதை, டெட் பால் என்றுதான் அறிவித்திருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரிய கவனத்துக்கு- இப்படி ஆட்டமிழக்கச் செய்தது, ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு அழகானதல்ல” என்று ஷேன் வார்ன் ட்வீட் செய்தார்.

உடனே ஹர்ஷா, ”எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று விதி எதுவும் இல்லை. இதே போல, விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் செய்யும் போது, அதைவிட்டுவிட்டு இப்படி எச்சரிக்கை விடுப்பாரா?” என்று கேட்டார். 

இதையடுத்து ஷேன் வார்ன், “முக்கியமான விஷயத்தை நீங்கள் விட்டுவிட்டீர்கள். உங்களிடமும் ஏமாற்றமடைந்துவிட்டேன். டீம் ஸ்பிரிட்டை மதிக்கும் நீங்கள், அஸ்வினின் இந்தச் செயலை ஆதரிக்கிறீர்களா? அஸ்வின் செய்தது வெறுக்கத்தக்கச் செயல். இந்திய கிரிக்கெட் வாரியம் நிச்சயம் இதை ஆதரிக்காது’’ என்றார்.

இதற்குப் பதிலளித்த ஹர்ஷா, “போட்டி நேற்று நன்றாக இருந்தது. கெய்ல், பட்லர் நன்றாக ஆடினர். அஸ்வின், ஆர்ச்சர், சர்பராஸ் கான் ஆகியோரும் சிறப்பாக விளையாடினர்” என்று ட்வீட் செய்தார்.

உடனே ஷேன் வார்ன், ‘’பாரபட்சமாக இருக்காதீர்கள்’’ என்று கூறிவிட்டு, ‘அஸ்வின் செய்ததை போல பென் ஸ்டோக்ஸ், விராத் கோலிக்கு செய்திருந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? அஸ்வினிடம் ஏமாந்துவிட்டேன். அவரிடம் திறமையும் நேர்மையும் இருக்கிறது என்று நினைத்திருந்தேன். பஞ்சாப் அணி, ஆதரவாளர்களை இழந்து விட்டது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஏதாவது செய்யும்’’ என்றார்.

‘நான் பாரபட்சமாக இல்லை. மூன்றாவது நடுவர், அவுட் என்று கூறிவிட்டார். அவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எலைட் குழுவில் இருப்பவர். அஸ்வின் என்ன செய்தாலும் நடுவரின் முடிவுக்கு உட்பட்டது’’ என்று தடாலடி பதிவு செய்தார் ஹர்ஷா. 

இவர்களின் இந்த வார்த்தை மோதல் ட்விட்டரில் பரபரப்பாக மாறியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com