2024 ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ள பிரேக் டான்ஸ்: பின்னணி என்ன?
2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக்கில் 4 போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பலரின் கவனைத்தையும் ஈர்த்துள்ள போட்டியாக இடம் பெற்றுள்ளது பிரேக் டான்ஸ்.
பாரிஸ் ஒலிம்பிக் அரங்கை அதிர வைக்கவுள்ள பிரேக் டான்ஸிங் கலைஞர்கள் டோக்கியோவில் இந்தாண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல்கள் காரணமாக அடுத்தாண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக 4 புதிய விளையாட்டுகளை கூடுதலாக இணைத்துள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் தெரிவித்துள்ளார்.
BREAK DANCING, SURFING என்னும் அலைச்சறுக்கு, SKATE BOARDING என்னும் சக்கர சறுக்கு , SPORTS CLIMBING என்னும் பாறை ஏறுதல் ஆகியவையே புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 4 விளையாட்டுகள். அலைச்சறுக்கு, சக்கர சறுக்கு, பாறை ஏறுதல் ஆகியவை விளையாட்டுகளாக அறியப்பட்டுள்ள நிலையில், நடனமாகவே பார்க்கப்பட்டு வந்த பிரேக் டான்ஸ் பட்டியலில் இணைந்துள்ளது நடனப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடுகள் புதிய விளையாட்டுகளை இணைத்துக் கொள்ளவும், பரிந்துரைக்கவும் வழிவகுக்கும் ஒலிம்பிக் கமிட்டியின் புதிய விதியின் படியே பிரேக் டான்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டு காலகட்டங்களில் அமெரிக்காவில் உருவானதே இந்த பிரேக் டான்ஸ் என்னும் கலை. நடனம் மட்டுமல்லாமல் பவர் ஃபுல்லான உடல் அசைவுகள், மலைக்க வைக்கும் வகையில் உடலை பல்வேறு கோணங்களில் சுழற்றும் SPIN அசைவுகள், வேகமான அசைவுகளுக்கு இடையே உறைந்த படி நிற்கும் FREEZE நிலை ஆகியவற்றை உள்ளடக்கியதே பிரேக் டான்ஸ். கலை மற்றும் உடற்பயிற்சி சார்ந்த காரணிகளை உள்ளடக்கியதன் காரணமாகவே பிரேக் டான்ஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இளைஞர்கள் மத்தியில் பிரேக் டான்ஸிற்கு பெரிய ஈர்ப்பு உள்ளதும், வியாபார ரீதியில் வரவேற்பு உள்ளதும், முக்கிய காரணிகளாக பேசப்படுகிறது.
நடனம் சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் எப்போதும் ஆரவாரத்தை அள்ளிக் கொடுக்கும். அது தற்போது பிரமாண்டங்களுக்குப் பெயர் பெற்ற ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது நடனப் பிரியர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்துள்ளது.