இந்திய வரைபடத்தில் விடுபட்ட வடகிழக்கு மாநிலங்கள்.. சுட்டிக்காட்டிய குத்துச்சண்டை வீராங்கனை!
2026 காமன்வெல்த் விளையாட்டில் 75 கிலோ எடைப்பிரிவில், அஸ்ஸாமைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்தியக் குத்துச்சண்டை அணிக்கு, கிளாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற இந்திய உணவகமான ‘மிஸ்டர் சிங்ஸ் இந்தியா’ சார்பில் வெற்றிக் கொண்டாட்ட விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, உணவகம் பயன்படுத்திய விளம்பரப் பலகையில் அச்சிடப்பட்டிருந்த இந்திய வரைபடத்தில் வடகிழக்கு மாநிலங்களின் பகுதிகள் விடப்பட்டிருந்தன. அத்துடன், ஜம்மு-காஷ்மீர் பகுதியின் எல்லையும் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட வீராங்கனை லவ்லினா, உணவக நிர்வாகியிடம் தனது மனவேதனையை வெளிப்படுத்தினார்.
அவர், "தயவுசெய்து இதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய வரைபடத்தில் எங்கள் வடகிழக்குப் பகுதி விடுபட்டுள்ளது எனக்குச் சிறிது மனவேதனை அளிக்கிறது. உணவகத்திற்கு வெளியேயும் இந்த வரைபடமே உள்ளது. வடகிழக்கிலிருந்து வந்த ஒருவருக்கு இது மிகவும் வலி தருகிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சரியாகப் பிரதிபலிக்கப்பட வேண்டும். அடுத்த முறை இதை நினைவில் கொள்ளுங்கள்" எனச் சுட்டிக்காட்டினார். அவருடைய இந்தக் கோரிக்கைக்கு இந்தியக் குத்துச்சண்டை கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் உள்ளிட்ட சக வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர். உணவக உரிமையாளர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொண்டு உடனடியாக மன்னிப்பு கேட்டனர். தாங்கள் பயன்படுத்தியது பழைய பிரிட்டிஷ் வரைபட வடிவம் என்பதால் இந்தத் தவறு நடந்துவிட்டதாகக் கூறிய நிர்வாகம், உடனடியாக அந்த வரைபடத்தை மாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.

