"இருவரும் 15 ஓவர்களில் போட்டியை முடிக்க நினைத்திருப்பார்கள்"-ஷிகர் தவான் பெருமிதம்
பிருத்வி ஷி, இஷான் கிஷன் ஆகியோர் போட்டியை 15 ஓவரிலேயே முடிக்க நினைத்திருப்பார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இலங்கை 262 ரன்களை எடுத்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து 36 ஆவது ஓவரிலேயே வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இது குறித்து பேசிய அவர் "அனைத்து வீரர்களும் விரைவாகப் போட்டியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விளையாடினார்கள். இளம் வீரர்கள் அனைவரும் போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாடியது அற்புதமாக இருந்தது. மைதானம் சுழற்பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தது. இந்திய அணியின் மூன்று ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்துவீசினர். அணியில் பலவீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஐபிஎல் மூலம் பல திறமையான இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர். அவர்களுக்கு மனஉறுதி அதிகமாக இருக்கிறது" என்றார் தவான்.
மேலும் பேசிய அவர் "பிருத்வி ஷா, இஷான் கிஷன் இருவரும் போட்டியை 15 ஓவர்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற திட்டத்தில்தான் களத்திற்குள் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்கள். என்னால் 100 ரன்கள் அடிக்க முடியவில்லை. வெற்றி இலக்கு இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருந்தால் சதமடித்திருக்கலாம். நான் என்னுடைய திறமையைத் தொடர்ந்து மெருகேற்றிக்கொண்டு வருகிறேன். அடுத்து வரும் போட்டிகளிலும் ரன்களை குவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார் ஷிகர் தவான்.