இந்தியாவில், முதல் சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக தயாராகி வருகிறது. பகலிரவு டெஸ்ட்டில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்துகள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் பழமைவாய்ந்த மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டன், புதுமையான டெஸ்ட் போட்டியை நடத்தவுள்ளது. இந்தியா- வங்கதேசம் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் மோதவிருக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும்.
பகலிரவு டெஸ்ட்டில், சிவப்பு நிற பந்துகளுக்கு பதிலாக பிங்க் நிற பந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. வங்கதேசத்துக்கு எதிரான இப்போட்டியில் பயன்படுத்த SG நிறுவனத்தின் 72 பிங்க் நிற பந்துகளை கிரிக்கெட் வாரியம் வாங்கியுள்ளது. மற்ற நாடுகள் கூகுபுரா நிறுவனத்தின் பிங்க் பந்துகளை பயன்படுத்தும் வேளையில், இந்தியா SG என்ற நிறுவனத்தை நாடியுள்ளது.
பிங்க் நிற பந்துகளை வடிவமைப்பதில் இந்த நிறுவனத்திற்கு போதிய அனுபவமில்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். பிங்க் நிற பந்துகள் இந்திய வீரர்களுக்கே அதிகம் பரிச்சயம் இல்லாதவை தான். வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் முதல்முறையாக பிங்க் பந்துகளில் விளையாட இருக்கிறார்கள்.
பிங்க் பந்துகள் அதன் தன்மையை இழக்க அதிக நேரம் ஆகும் என்பதால், சிவப்பு நிற பந்துகளை விட இவற்றை கூடுதல் நேரத்திற்கு ஸ்விங் செய்ய இயலும். இருப்பினும் பிங்க் நிற பந்துகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்தப் பந்துகளில், சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகளவில் சுழற்ற இயலாது.
பிங்க் நிற பந்துகள் சில தருணங்களில் பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுத்துள்ளது. பாகிஸ்தானின் அசார் அலி முச்சதமும், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் இரட்டை சதமும் அடித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில், பிங்க் நிற பந்துகளை பயன்படுத்தி இதுவரை நடந்துள்ள 11 பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.