’இதை ஏற்றுக்கொள்ள முடியாது’: ஐசிசி-யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்

’இதை ஏற்றுக்கொள்ள முடியாது’: ஐசிசி-யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்

’இதை ஏற்றுக்கொள்ள முடியாது’: ஐசிசி-யிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார்
Published on

இந்தியா - இலங்கை அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின்போது, ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற பேனர் பறக்க விடப்பட்டதை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துப்பூர்வமாக ஐசிசி-யிடம் புகார் தெரிவித்துள்ளது. 

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. கடந்த ஜூன் 29 ஆம் தேதி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணி கள் மோதியபோது மைதானத்துக்கு மேலே, ’பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி விமானம் ஒன்று பறந்தது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கண்டனம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் நேற்றும் விமானம் மூலம் பேனர் பறக்கவிடப்பட்டது. லீட்ஸில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. அப்போது விமானம் ஒன்று ’காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற பேனரை சுமந்தபடி சென்றது. இதற்கு ஐசிசி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. 

இதுபற்றி ஐசிசி விடுத்த அறிக்கையில், ‘’விமானத்தின் மூலம் அரசியல் பேனர்களை விடும் சம்பவம் மீண்டும் நடந்துள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். உலகக் கோப்பை தொடரில், எந்த அரசியல் கோஷங்களையும் ஆதரிப்பதில்லை. இந்த தொடர் முழுவதும் போலீஸ் உதவியுடன் இதுபோன்ற அரசியல் எதிர்ப்புகளை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இதற்கு முன் நடந்த சம்பவத்தின்போது மேற்கு யார்க்‌ஷையர் போலீசார், இனி இப்படி நடக்காது என்று உறுதியளித்திருந்தனர். ஆனால் மீண்டும் இப்படி நடந்திருப்பது அதிருப்தியை அளிக்கிறது’’ என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசி-க்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது. 

இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபற்றிய எங்கள் கவலையை ஐசிசிக்கு தெரிவித்துள்ளோம். இதுபோன்ற சம்பவம் அரையிறுதி போட்டியிலும் தொடர்ந்தால், அது உண்மையிலேயே துரதிர்ஷ்டமாக அமையும். எங்கள் வீரர்களின் பாதுகாப்பு முக்கியமானது’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com