”கோலி vs கங்குலி vs ரோஹித்; ஃபிட்னஸ்-க்காக ஊசி” - Team India பற்றி அம்பலப்படுத்திய சேட்டன்

”கோலி vs கங்குலி vs ரோஹித்; ஃபிட்னஸ்-க்காக ஊசி” - Team India பற்றி அம்பலப்படுத்திய சேட்டன்
”கோலி vs கங்குலி vs ரோஹித்; ஃபிட்னஸ்-க்காக ஊசி” - Team India பற்றி அம்பலப்படுத்திய சேட்டன்

நாக்பூரில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விரல்களில் வலி நிவாரணி க்ரீம் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் அவருக்கு 25 சதவிகிதம் அபராதம் விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ICC.

இந்த நிகழ்வே கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பேசியதாக கசிந்த செய்திகள் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது.

தனியார் தொலைக்காட்சியின் இந்த புலனாய்வில் மறைமுக கேமிராவில் பதிவான தகவல்களில், கோலி-கங்குலிக்கும் இடையேயான பனிப்போர் , கோலி - ரோஹித்துக்கும் இடையேயான ஈகோ போர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எடுத்துக்கொள்ளும் ஊசி மருந்துகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. அவற்றின் விவரங்களை காணலாம்.

கங்குலி - விராட் கோலி இடையேயான கருத்து மோதல் குறித்து பேசியிருக்கும் சேட்டன் சர்மா, “அணியின் கூட்டத்தின் போது கோலி கூறியதற்கு எதிராக கங்குலி எதிர் கருத்து தெரிவித்ததில் இருந்துதான் இருவருக்கும் இடையே மோதல் உண்டாகியிருக்கிறது. 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடருக்காக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதுதான் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

வீடியோ கான்ஃபரென்சிங்கில் நடந்த தேர்வுக்குழு சந்திப்பில் நான் உட்பட 9 பேர் கலந்துக்கொண்டோம். அப்போது கேப்டன்சி விலகல் குறித்து ஒரு முறை யோசியுங்கள் என கங்குலி சொன்னார். ஆனால் இதனை விராட் கேட்டோ அல்லது கேட்காமல் இருந்திருக்கக் கூடும். கங்குலி கூறியதை விராட் கோலி கேட்டாரா இல்லையா என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.

கங்குலியை சிக்கவைப்பதற்காகவே, “கேப்டன்சி நீக்கம் பற்றி பொதுவெளியில் அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே கூறினார்கள்” என அப்போது விராட் சொல்லியிருக்கிறார். ஏனெனில் கங்குலியால்தான் தன்னுடைய கேப்டன்சி பறிபோனதாக கோலி கருதுகிறார்.” என சேட்டன் சர்மா கூறியிருக்கிறார்.

அடுத்தபடியாக, கோலி - ரோஹித் இடையேயான பனிப்போர் குறித்தும் பேசியிருக்கும் அவர் தெரிவித்ததாவது, “ரோஹித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவாக இருக்கவில்லை. ஆனால் அவருக்கு விராட் மீது பெரிதாக எந்த அபிப்ராயமும் இருந்ததில்லை. அதேவேளையில் விராட்டுக்கும் ரோஹித்துக்கும் இடையே சண்டை உள்ளது என்கிறார்கள்.

ஆனால் அது சண்டை இல்லை. ஈகோ முற்றல்தான். அதாவது அமிதாப் பச்சன் தர்மேந்திரா இடையேயான நட்சத்திர போட்டி போல. இந்திய அணியில் ரோஹித் ஒரு குழுவுக்கும் தலைமையாகவும், விராட் ஒரு குழுவுக்கு தலைமையாகவும் இருக்கிறார்கள்.” எனக் கூறியிருக்கிறார் சேட்டன் சர்மா. 

இதேபோல, இந்திய அணி வீரர்கள் உடற்தகுதிக்காக ஊசி மருந்துகள் எடுத்துக்கொள்வது பற்றி சேட்டன் சர்மா பேசியது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் வித்திட்டிருக்கிறது. அதன்படி, “இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உடற்தகுதியே இல்லை.

முழுமையான உடற்தகுதியை எட்டாத காயமடைந்த வீரர்கள் ஊசி மருந்துகளை எடுத்துக்கொண்டு 80% தகுதியோடு கூட போட்டியில் பங்கேற்றிருக்கிறார்கள். பும்ராவால் முதுகை வளைக்க முடியாமல் போனதால் ஊசி வழியாக ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதால் அவரால் விளையாட முடியவில்லை.

ஆனால் சில வீரர்கள் உடற்தகுதிக்காக ஊசி போட்டுக்கொண்டு விளையாடுகிறார்கள். வலி நிவாரணி மருந்துகளாக இருந்தால் அவை ஊக்க மருந்துகள் பட்டியலில் வரும். ஆகையால் வீரர்களுக்கு எந்த ஊசி ஊக்க மருந்தில் வரும் என்பது தெரியும். ஆகையால் இவ்வாறு ஊசிப் போட்டுக்கொள்வதால் அவை ஊக்க மருந்து சோதனையிலும் அகப்படாது.” என்று சேத்தன் சர்மா பேசி புயலை கிளப்பியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com