பங்களாதேஷ் அணி தனது தொடக்க ஆட்டக்காரர்களை விரைவிலேயே இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷத்மன் இஸ்லாமும் இம்ருல் கயேஸும் களமிறங்கினர். இருவரும் தலா 6 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்தனர். இம்ருல் விக்கெட்டை உமேஷ் யாதவும் இஸ்லாம் விக்கெட்டை இஷாந்த் சர்மாவும் காலி செய்தனர்.
அடுத்து கேப்டன் மொமினுல் ஹக்-கும் முகமது மிதுனும் வந்தனர். மிதுன் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் முகமது ஷமி. இதனால் அந்த அணி 17.6 ஓவர்களில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அடுத்து ஹக்குடன், முஷ்பிகுர் ரஹிம் இணைந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்தனர்.
மதிய உணவு இடைவேளை வரை, 26 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. ஹக் 22 ரன்களுடன் ரஹிம் 14 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.