ஷமி, அஸ்வின் அசத்தல்: முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் சுருண்டது பங்களாதேஷ்

ஷமி, அஸ்வின் அசத்தல்: முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் சுருண்டது பங்களாதேஷ்
ஷமி, அஸ்வின் அசத்தல்: முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் சுருண்டது பங்களாதேஷ்

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 150 ரன்களுக்கு சுருண்டுள்ளது. 

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷத்மன் இஸ்லாமும் இம்ருல் கயேஸும் களமிறங்கினர். இருவரும் தலா 6 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்தனர். இம்ருல் விக்கெட்டை உமேஷ் யாதவும் இஸ்லாம் விக்கெட்டை இஷாந்த் சர்மாவும் காலி செய்தனர். 

அடுத்து கேப்டன் மொமினுல் ஹக்-கும் முகமது மிதுனும் வந்தனர். மிதுன் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் முகமது ஷமி. இதனால் அந்த அணி 17.6 ஓவர்களில் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அடுத்து ஹக்குடன், முஷ்பிகுர் ரஹிம் இணைந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்தனர். எனினும் மொமினுல் ஹக் 37 ரன்கள் எடுத்திருந்தப் போது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முஷ்பிகுர் ரஹிமும் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த வீரர்களில் லிட்டன் தாஸ் மட்டும் ஒரளவு தாக்கு பிடித்து ஆடினார். இவர் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பங்களாதேஷ் அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி தற்போது வரை 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 6 ரன்களுடன் அபு ஜெயத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com