இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் காயமடைந்தார். அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவர் நாடு திரும்புகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, லண்டனில் கடந்த 24- தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 184 ரன்னுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, முகமது அப்பாஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அவர் 68 ரன்கள் எடுத்திருந்த போது, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து, முழங்கையில் பலமாகத் தாக்கியது. உடனடியாக கை வீங்கியதால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரால் கையை கீழே போட முடியவில்லை. வலியால் துடித்த அவர் பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டபோது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிந்தது. நான்கு முதல் ஆறு வாரம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் தொடரில் இருந்து விலகி நாடு திரும்புகிறார். அவருக்குப் பதிலாக வேறு வீரர் பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்படுகிறார்.