உலகக் கோப்பை முன்னோட்டமா..? வெற்றிக்கான பொறுப்பாட்டமா..? - தோனி அலசல்..!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகள் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இதற்கு முன்னர் நடந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. அது ஒரு வரலாற்று வெற்றியாகும். ஆனால் அந்த டெஸ்ட் தொடரை விட, தற்போது இந்தியா வென்றுள்ள ஒருநாள் தொடர் பேசு பொருளாகியுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் தோனி ஆட்டம் எனலாம். தோனி இப்போதுதான் அடிக்கிறாரா? என்றால், அப்படியெல்லாம் இல்லை, இரண்டாவது பேட்டிங்கில் இந்திய அணியில் சிறந்த வீரராக இதுவரையில் தோனிதான் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில்தான் கோலி இருக்கிறார். இருப்பினும் இப்போது தோனி விளையாடிய பேட்டிங் மட்டும் பேசு பொருளானதற்கு காரணம், இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தான்.
ஆம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஒரு தகவல்தான் இத்தனை கேள்விகள் எழும்ப காரணமாக உள்ளது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. அதில் இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணியில் களமிறங்கிய தோனி 96 பந்துகளை சந்தித்து 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரிஷாப் பண்ட்டுக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத்தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்தார். இந்தத் தகவல் வெளியானதும், தோனி நிலை என்ன? அவருக்கு உலகக் கோப்பையில் இடம் உண்டா இல்லையா ? என்ற கேள்விகள் குவிந்தன.
ஒருபுறம் தோனி பெஸ்ட் ஃபினிஷர் தான், அவரது பேட்டிங்கை குறைசொல்ல யாராலும் முடியாது என தோனி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கினர். ஆனால் இந்தச் சர்ச்சை தொடர்பாக எதுவும் பேசாத தோனி, அனைத்திற்கும் விடையாய் இரண்டாவது போட்டியில் 55 (54) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை பறித்தார். இது தோனி இன்னும் அதே தோனி தான் என அனைவரையும் பேச வைத்தது. ஆனாலும் ரிஷாப் பண்ட் தொடர்பாக வெளியான தகவலின் காரணத்தால், உலகக் கோப்பையில் இடம்பெற தோனி இந்தப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் 87 (114) ரன்களை எடுத்த ஆட்டமிழக்காமல் தோனி இறுதிவரை பேட்டிங் செய்து அணியின் வெற்றியை பெற்றார். இதனால் அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் தனது திறமையையும் அவர் நிரூபித்துவிட்டார். ஆனால் இதை உலகக் கோப்பைக்காக அடித்தாரா? அல்லது அணியின் வெற்றியை பெறவேண்டும் என்ற பொறுப்பில் அடித்தாரா? என்ற கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. ஏனென்றால் இந்தத் தொடருக்குப் பின்னர் நியூஸிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடுகிறது. அதன்பின்னர் நேராக உலகக் கோப்பைதான்.
எனவே இந்தத் தொடரில் விளையாடிய வீரர்களில் சிலரது ஆட்டத்தை பொறுத்தே உலகக் கோப்பையில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அந்த வகையில் இத்தனை நாட்கள் பொளிவற்று இருந்த தோனியின் உலகக் கோப்பை வாய்ப்பு, இந்த ஒருநாள் தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டதில் பிரகாசம் அடைந்துள்ளது.
அதனை வெளிக்காட்டும் வகையில் கோலி இன்று கொடுத்த பேட்டியில் ஒருவரியை குறிப்பிடலாம். வெற்றிக்குப் பின்னர் இன்று பேசிய கோலி, “இன்றைய போட்டி எங்கள் உலகக் கோப்பை நினைவுகளில் நம்பிக்கை மற்றும் தெளிவை கொடுத்துள்ளது” என்று கூறினார். இதேபோன்று 6 விக்கெட் வீழ்த்திய சஹால் மற்றும் சரியான நேரத்தில் அரை சதம் அடித்த கேதர் ஜாதவ் ஆகியோரின் தேர்வு குறித்தும் ஆலோசிக்க செய்துள்ளது.
என்னதான் விமர்சனங்கள், கருத்து மாறுபாடுகள் எழுந்தாலும் பொறுப்புடன் வெற்றியை பெற்றுக்கொடுத்தார் தோனி என்பதே உண்மை. அத்துடன் டி20 உலகக் கோப்பை முதல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரை கேப்டனாக இருந்து அவர் பார்க்காத உச்சம் இல்லை.
இப்படி இருக்கையில் இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை அவர் மனத்திற்குள்ளாகவே வைத்துள்ளார் என்பதெல்லாம், பலரின் எண்ணமாக தெரிகிறது. இந்திய அணியில் இனி வரும் காலங்களில் எத்தனை வீரர்கள் வந்தாலும், ‘என்றுமே தோனி., தோனிதான்’.