வார்னர் மிரட்டலில் பரிதாபமாகச் சுருண்டது இலங்கை!
இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின், முதலாவது போட்டி அடிலெய்டில் இன்று நடந்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. கேப்டன் ஆரோன் பின்ச்-சும் டேவிட் வார்னரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இருவரும் இலங்கை
பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சிக்சர்களாகவும் பவுண்டரிகளாகவும் பறக்கவிட்ட பின்ச், 36 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் மூன்று சிக்சர்களும் எட்டு பவுண்டரிகளும் அடங்கும்.
அடுத்து மேக்ஸ்வெல், வார்னருடன் இணைந்தார். இருவரும் பந்துகளை பறக்கவிட்டு மிரட்ட, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார், இலங்கை கேப்டன் மலிங்கா. 9.4 ஓவரில் 100 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி, 17.3 ஓவர்களில் 200 ரன்களை தொட்டது. மேக்ஸ்வெல் 22 பந்துகளில் அரை சதம் அடித்து, இலங்கை பந்துவீச்சாளர்களை வியப்படைய வைத்தார். கடைசி ஓவரில், ஷனகா வீசிய பந்தில் பெரேராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நின்று தாண்டவமாடிய
அவர், 28 பந்துகளில் 3 சிக்சர், 7 பவுண்டரியுடன் 62 ரன்கள் குவித்தார். அடுத்து டர்னர் வந்தார்.
கடைசி ஓவரின், கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து, சதமடித்தார் வார்னர். அவர் 56 பந்துகளில் 4 சிக்சர், 10 பவுண்டரிகளுடன், சர்வதேச டி-20 போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது.
அடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அதிகப்பட்சமாக ஷனகா 17 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் இலங்கை அணியால், 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய தரப்பில் ஆதம் ஸம்பா 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் அகார் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.