ஆசியக் கோப்பை: பாகிஸ்தானை இன்று மீண்டும் சந்திக்கிறது இந்திய அணி!

ஆசியக் கோப்பை: பாகிஸ்தானை இன்று மீண்டும் சந்திக்கிறது இந்திய அணி!

ஆசியக் கோப்பை: பாகிஸ்தானை இன்று மீண்டும் சந்திக்கிறது இந்திய அணி!
Published on

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதுகின்றன.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன. 

அடுத்து சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் செல்லும்.

இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் இன்று நடக்கும் ஒரு போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. சூப்பர்-4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷை வென்ற இந்திய அணி, இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் இறுதிப்போட்டியை உறுதி செய்யும். நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத அணியான இந்தியா, பாகிஸ்தானுடன் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த லீக் போட்டியில் 162 ரன்களில் சுருட்டியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவானும் கேப்டன் ரோகித் சர்மாவும் நிலைத்து நின்று நல்ல தொடக்கம் அளிக்கிறார்கள். அதோடு ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அணிக்கு வலு சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சில் பும்ரா, புவனேஷ்வர்குமார் மற்றும் சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, பார்ட் டைம் பந்துவீச்சாளர் ஜேதர் ஜாதவ் ஆகியோர் கலக்குவதும் இந்திய அணிக்கு பலமாக இருக்கிறது. இவர்கள் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி வெற்றி பெறுவது நிச்சயம்.

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை போராடி வென்ற பாகிஸ்தான் அணி, இந்த முறை எச்சரிக்கையோடு விளையாடும். அந்த அணியின் பஹர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அஸாம், மூத்த வீரர் சோயிப் மாலிக் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பந்துவீச்சாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். கடந்த போட்டியின் தோல்விக்கு இந்தப் போட்டியில் பழிவாங்க பாகிஸ்தான் நினைக்கும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

அபுதாபியில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள். லீக் சுற்றில் பங்களா தேஷூக்கு ஷாக் கொடுத்த ஆப்கான் வீரர்களின் சுழல் இந்த போட்டியில் மிரட்டும் என்பதால் அதை சமாளிக்க வியூகம் வைத்துள்ளதாக பங்களாதேஷ் அணி தெரிவித்துள்ளது. போட்டி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com