கடைசியில் கைக்கொடுத்த அஸ்வின்-குல்தீப்! முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்!

கடைசியில் கைக்கொடுத்த அஸ்வின்-குல்தீப்! முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்!
கடைசியில் கைக்கொடுத்த அஸ்வின்-குல்தீப்! முதல் இன்னிங்ஸில் 404 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் சேர்த்துள்ளது இந்திய அணி.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்று தோல்வியடைந்த இந்திய அணி, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஆடிவருகிறது.

இந்நிலையில் நேற்று தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர்கள் கேஎல் ராகுல் மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் 14ஆவது ஓவரை வீச வந்த இஸ்லாம், சுப்மன் கில் விக்கெட்டை எடுத்து வெளியேற்றினார். பின்னர் பந்துவீச வந்த கலீல் அகமது கேப்டன் ராகுலை பவுல்டாக்கி வெளியேற்ற, தொடர்ந்து வந்த விராட் கோலியும் இஸ்லாம் பந்துவீச்சில் லெக் பை விக்கெட்டில் வெளியேற 48 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

பின்னர் புஜாராவோடு கைக்கோர்த்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விளாசி 46 ரன்கள் சேர்த்திருந்த பண்ட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை எடுத்துச்செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், மெஹிடி ஹாசன் வீசிய பந்தில் பவுல்டாகி வெளியேறினார். தொடர்ந்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

149 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ்-புஜாரா கூட்டணி!

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ்-புஜாரா இருவரும் அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் 200ஐ தொட்டது. தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, இந்த கூட்டணியை 261 ரன்கள் இருந்த நிலையில், புஜாராவை பவுல்டாக்கி பிரித்தார் டைஜுல் இஸ்லாம். 11 பவுண்டரிகள் விளாசி 90 ரன்களை சேர்த்திருந்த நிலையில் புஜாரா சதத்தை தவறவிட்டு வெளியேறினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்திருக்க, 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் ஸ்ரேயாஸ்.

கடைசி நேரத்தில் கைக்கொடுத்த ரவி அஸ்வின்-குல்தீப் யாதவ்!

இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஆவது சதத்தை கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் தவறவிட்டு எபதாத் ஹொசைன் பந்தில் போல்டாகி 86 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் கைக்கோர்த்த அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் பொறுப்புடன் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய அஸ்வின் அரைசதம் அடித்து அசத்தினார்.

பின்னர் அஸ்வின் 58 ரன்களிலும், குல்தீப் 40 ரன்களிலும் வெளியேற 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 404 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி.

முதல் பந்தில் முதல் விக்கெட்!

முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி கொடுத்தார் இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ். சிறப்பான பந்தை வீசிய அவர் ஓபனர் ஷாண்டோவை வெளியேற்றி முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com