"என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி" அர்ஜூன் டெண்டுல்கர்
தன் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்றி என அர்ஜூன் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 சீசனுக்கான மினி ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலமெடுத்தது.
இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜூனுக்கு அடிப்படை விலை ரூ.20 லட்சமாகும். அவரது பெயர் வாசிக்கப்பட்ட போது ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணி கேட்டது. வேறு எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனால் அவர் மும்பை அணிக்கு தேர்வானார்.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர் பதிவில் அர்ஜூன் பேசிய வீடியோவை வெளியிட்டது அதில் "சிறு வயதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன். என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

