இலங்கையில் மலிங்காவை போலவே 17வயது இளம் வீரர் ஒருவர் பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்துவருவது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் லசித் மலிங்கா. இவர் தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்கர் பந்துவீச்சினாலும் பிரபலமானவர். இவர் இலங்கை அணிக்காக பல நேரங்களில் சிறப்பாக பந்துவீசி உள்ளார். அத்துடன் அணியை தனது பந்து வீச்சின் மூலம் வெற்றிப் பெறவும் வைத்துள்ளார். இவர் தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் மலிங்காவை போலவே 17வயது இளம் வீரர் ஒருவர் பந்துவீசுவது மிகவும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. 17 வயதாகும் மதீசா பதிரானா என்ற இளம் வீரர் டிரினிட்டி கல்லூரி சார்பில் களமிறங்கியுள்ளார். தனது முதல் போட்டியிலேயே இவர் மலிங்கா போலவே பந்துவீசியதுமல்லாமல் விக்கெட்களையும் சாய்த்துள்ளார். இவர் 7 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்களை எடுத்துள்ளார். இவர் இந்தப் போட்டியில் மலிங்காவை போல யார்கர் பந்துகளை துல்லியமாக வீசியுள்ளார். அத்துடன் இவரின் வித்தியாசமான பந்துவீச்சு முறையால் பேட்ஸ்மேன்களால் இவரை கணிக்க முடியவில்லை.
இவரது பந்துவீச்சு தொடர்பான வீடியோவை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இவர் தற்போது இலங்கையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் மலிங்காவை போலவே பந்துவீசுவதால் கிரிக்கெட் வட்டாரங்களில் மிகவும் உற்று நோக்கப்படுகிறார். இலங்கை அணியில் லசித் மலிங்கா வரும் 2020ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிட்டால் அவருக்கு பின் மதீசா அந்த இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.